ஊரடங்கு என்னும் ஒற்றை முடிவினால் தமிழகத்தின் மொத்த வேலைகளையும் முடங்கியுள்ளன. மற்ற வேலைகளையாவது தற்காலிகமாக நிறுத்திவிட்டு பின்னர் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் விவசாயம் என்பது அப்படி அல்ல. அதை நிறுத்திவிட்டு எல்லாம் பின்னர் தொடர முடியாது. சாரியான காலத்தில் பயிரிட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பின்னர் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். இதில் எதையாவது தவறவிட்டால் அனைத்தும் பாலாகிவிடும்.
அந்த வகையில் தமிழகத்தில் விவசாயத்தை ஊரடங்கு முற்றிலுமாக வறட்சி போல வாட்டிவிட்டது. அறுவடைக்கு தயாரான பயிர்கள், பழங்கள், மரங்கள், இலைகள், பூக்கள் என அனைத்தும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் விவசாயக் கூலிகள் வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைச் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் தடுக்கவும் விவசாயிகளை காக்கவும் அரசும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல் கொள்முதல் மானியமாக ரூ.1321 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் விவசாயிகளுக்கு சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் விவசாய வேலைகளில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டாம் என்றும், உரிய சமூக இடைவெளியுடன் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைகளுக்கு செல்லலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் விவசாயிகள் துயரம் முடிவுக்கு வந்த பாடில்லை.
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பளவு 130.3 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதில் நிகர சாகுபடி பரப்பளவு 46.39 லட்சம் ஹெக்டேர். 59.73 லட்சம் ஹெக்டேர் சாகுபடி நிலங்களாவும், 79.39 லட்சம் ஹெக்டேர் நில உரிமையாளர்கள் வசமும் உள்ளன. தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்களில் 93% பேர் சிறுகுறு விவசாயிகள் ஆவர். சராசரி உணவு உற்பத்தி ஆண்டுக்கு 100 லட்சம் மெட்ரிக் டன் ஆக உள்ளது. தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் நெல் 62% ஆக உள்ளது.
தமிழகத்தின் மொத்த சாகுபடி பரப்பில் நெல் 33% பயிரப்படுகிறது. 17.59 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 62.26 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் மிக அதிகமாக சாகுபடி செய்யப்படும் மாவட்டமாக திருவாரூர் திகழ்கிறது. அங்கு 1.8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக தஞ்சாவூர், 3வது இடத்தில் நாகையும் உள்ளன.
இதுதவிர தமிழகத்தில் மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் 8.8 லட்சம் ஹேக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகின்றன. இவை மட்டும் 35.7 லட்சம் மெட்ரிக் டன் ஆண்டுதோறும் உற்பத்தியாகின்றன. அத்துடன் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்கள் 3.8 லட்சம் ஹெக்டேரில் பயிடப்படுகின்றன. இவை மொத்தம் 10.3 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும், 4.3 லட்சம் ஹெக்டேரில் தென்னை பயிரிடப்பட்டு, அதன்மூலம் ஆண்டுக்கு 47,064 லட்சம் தேங்காய்கள் கிடைக்கின்றன. இதுமட்டுமின்றி 2.4 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 296 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. இவ்வாறாக மக்களுக்கு வேலைவாய்ப்பில் தமிழகத்தின் முதுகெலும்பாக இருந்து பெரும் பங்கு வகிக்கிறது விவசாயம். இந்த துறையை நம்பி கோடிக்கணக்கான விவசாயக் கூலிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது சோகத்தின் உச்சத்தில் உள்ளனர். விளைந்த பொருளை அறுவடை செய்ய முடியாததும், விற்பனை செய்ய முடியாததும் பெருந்துயரம் என்கின்றனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் புதிய தலைமுறையிடம் தகவல்களை பகிர்ந்துகொண்டார். விவசாயிகளுக்கு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து கூறிய அவர், “முதலமைச்சர் அறிவித்ததுபோல தலா 1000 ரூபாய் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் விவசாயத்தில் துறை வாரியான நிதிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாலர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “அரசாங்கம் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்பதை நாம் பார்த்துள்ளோம். இதுபோன்ற நெருக்கடியான காலத்தில் எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கமுடியாது. ஆனால் இந்த பூதாகரமான பிரச்னைக்கு ஏற்ற நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறதா ? என்பதை பார்க்க வேண்டும். ஆட்சியர் குறிப்பிட்ட ரூ.1000-ஐ வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எனவே விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும். அத்துடன் ரேசன் பொருட்கள் என்பது வழக்கமான ஒன்று தான்.
மக்களின் தேவை அனைத்தையும் மாநில அரசே பூர்த்தி செய்யமுடியாது. இதில் மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும். நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளுக்கு அண்மையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து விவசாயிகளுக்கு நிதி கொடுக்கலாம். எனவே மத்திய அரசு நிதி கொடுத்தாலும் இல்லையென்றாலும், தமிழக அரசு மற்ற துறைகளுக்கு ஒதுக்கிய நிதியை எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.