ஊரடங்கால் சீர்காழி முதல் திருக்கடையூர் வரை கோடைக்கால பயிரான நுங்கு மற்றும் தர்பூசணி விற்பனை பாதித்துள்ளதால் விவசாயிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, செங்கமேடு, சூரைக்காடு, கருவி தொடங்கி திருக்கடையூர் வரை சுமார் 20 கீ.மீ தூரம் பனை நுங்கு மற்றும் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடைக் காலம் தொடங்கியவுடன் பனை மரங்களை நம்பி சிறு விவசாயிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் இதனை விற்பனை செய்து பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாகக் கோடைக் காலங்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பனை நுங்கு வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தப் பனை நுங்கு  உடல் சூட்டைத் தனிப்பது மட்டுமின்றி சரும நோய்களைத் தடுக்கும் மருந்தாகவும் உள்ளது.
 
image
 
மேலும் கோடைக் காலம் தொடங்கியது முதல் சீர்காழி முதல் திருக்கடையூர் வரையிலான சாலையோரங்களில் அதிக அளவில் பனை நுங்கு விற்பனை நடைபெறுவது வழக்கம். அதே போல் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இச்சாலை பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோவில் நகரங்களுக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால் தொடர் வாகன போக்குவரத்து எப்போதுமே இருந்து வரும். 
 
image
 
சுற்றுலாப் பயணிகள் வருகை வருடாவருடம் அதிகமாக இருக்கும் என்பதால் சாலையோர வியாபாரிகள் இதுவரை நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சாலையோர வியாபாரம் முற்றிலும் முடக்கிவிட்டது. கோடைக் காலப் பயிரை நம்பி பல குடும்பங்கள் மூன்று மாதங்கள் வரை பாடுபட்டு வளர்த்த தர்பூசணியும் வெட்டி வைத்த பனை நுங்கும் வாங்க ஆட்களின்றி காய்ந்து வருகிறது. எனவே நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.