மனைவி இறந்த சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய நபரை 23 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகள்
குடும்பத்தினருடன் சேர்ந்து வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மனிதம் விதைப்போம், சோயா அறக்கட்டளை மற்றும் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் உள்ளிட்ட அறக்கட்டளைகளைச்
சேர்ந்தவர்கள் அடைக்கலம் அளித்து, உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் முதியோர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 65 முதியோர்களை மீட்ட அவர்கள், மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து முடிவெட்டி, புது ஆடைகளை வழங்கி பராமரித்து வருகின்றனர்.
அதில் கடந்த 23 ஆண்டுகளாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அழுக்கு உடையுடனும், சிக்குப் பிடித்த தலையுடனும் சுற்றித்திரிந்த வேல்முருகன் என்பவரை மீட்ட அறக்கட்டளையினர் அவருக்கு முடிவெட்டி புத்தாடை அணிவித்து அழகு பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது மூத்த மகன் ராமசந்திரன் தற்போது அவரின் தந்தையை 23 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்து சேர்ந்துள்ளார்.
இது குறித்து ராமசந்திரன் கூறும் போது “நானும் எனது குடும்பத்தினரும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தோம். அப்போது
எதிர்பாராத விதமாக எனது அம்மா இறந்து விட்டார். இதனை தாங்க முடியாத எனது அப்பா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். திடீரென்று
ஒரு நாள் அவர் காணாமால் போய் விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அம்மா இறந்த பிறகு அப்பாவும் காணாமால் போனதால் நான்
மிகுந்த வருத்தத்தில் வாழ்ந்து வந்தேன்.
மேலும் அவர் கூறும் போது, “தாயாரின் மறைவுக்கு பிறகு காணாமல் போன எனது தந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தேன். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் எனது தந்தையின் புகைப்படம் பரவியதை நண்பரின் மூலம் தெரிந்துகொண்ட நான் இங்கு எனது தந்தை பராமரிக்கப்பட்டு வருவதை நேரடியாக கண்டேன். எனது தந்தை மீண்டும் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எனது தந்தை இருக்கும் நிலையில் அவரை வைத்து பராமரிப்பது என்னுடைய பொருளாதார சூழ்நிலையில் முடியாத காரியம் என்பதால் அவருக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் முன்வந்துள்ளனர். எனவே அவர் முறையான சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின் எனது தந்தையை நான் அழைத்துச் செல்வேன்” என்றார்.