இந்தியா இளம் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கொண்ட நாடு என்பதை மேலும் உறுதிசெய்யும் வகையிலும், விளையாட்டுத் துறையில் சாதிக்க, தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், ஓட்டப் பந்தய வீரங்கனையான ஹிமாதாஸின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன. விளையாட்டுத் துறைக்கான ஆடைகளைத் தயாரிக்கும் பெருநிறுவனமான ‘அடிடாஸ்’ தற்போது ஹிமாதாஸிற்கு பிரத்தியேகமாக அவர் பெயர் பொறித்த ஷூக்களைத் தயாரிக்கிறது.
நாட்டின் தற்போதைய தலைசிறந்த sprinter ஆன ஹிமாதாஸ், தன் வாழ்க்கையின் யதார்த்த நிகழ்வு ஒன்றை வெளிக்கொணர்ந்து பகிர்ந்துள்ளார். “நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஆரம்ப காலகட்டத்தில் காலணிகள் இல்லாமல் வெறும் காலோடுதான் ஓடினேன். நான் முதல் தேசியப் போட்டியில் கலந்துகொள்ளும் போது, என் தந்தை ஒரு சாதாரண ஸ்பைக்ஸ் ஷூவை வாங்கித் தந்தார். அப்போது அந்த ஷூவில் அடிடாஸ் என கைப்பட நானே எழுதிக்கொண்டேன். ஆனால் தற்போது, அதே அடிடாஸ் நிறுவனம் எனக்கான ஷூக்களை பிரத்யேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது. விதி என்ன செய்யும் என்பதை நீங்கள் எப்போதும் அறிய இயலாது” எனக் கூறுகிறார் அந்த 20 வயது இளம்பெண்.
ஹிமா தாஸ், ஃபின்லாந்தில் 2018-ல் நடந்துமுடிந்த உலக அளவிலான U-20 சேம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பிறகு, ஜெர்மன் நிறுவனம் தனது நிறுவனத் தூதுவராக அவரை இணைத்துக்கொண்டது. பிறகு அதே நிறுவனம், அவருக்காக ஒரு பகுதியில் அவரது பெயரும் மற்றொரு பகுதியில் “க்ரியேட் ஹிஸ்டரி (create history)” என்ற வாசகமும் பொறித்த ஷூக்களை தயாரித்துக்கொடுத்தது.
மேலும் ஹிமாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் : இந்தோனேசியாவில் தனித்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், பெண்களுக்கான 400M ஓட்டப் பந்தயம் மற்றும் 400M கலப்பு தொடர் ஓட்டத்தில் தலா ஒரு தங்கமும் வென்றுள்ளார்.
“2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவில், மக்கள் விளையாட்டு போட்டிகளைப் பின்தொடர்ந்து வருகின்றனர்” என தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகள் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில், ஹிமா தாஸ் கூறியதாவது, “ஊரடங்கு காரணமாக நாங்கள் விளையாட்டு மைதானத்திற்குப் போக அனுமதியில்லை. ஆனால், அதை நான் ஒரு குறையாக எடுத்துக்கொள்ளாமல், வீட்டிலேயே யோகா பயிற்சிகளைச் செய்கிறேன். அதனால் என் ரத்த ஓட்டம் சீராக உள்ளது. உணவு குறைவாகவும் பழங்கள் அதிகமாகவும் உண்கிறேன். இறைச்சி உண்பதில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர், தனது உடற்காயத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும், ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், டோக்கியோ கேம்ஸ்களுக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ள நிறைய நேரம் கிடைத்துள்ளது எனவும் கூறினார்.
தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு உடனடியாக ஓட்டப் பந்தய களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் ‘ஹிமா’ தெரிவித்துள்ளார்.
ஹிமா தனது சுவாரஸ்யமான நிகழ்வாகக் கூறியது, “எனது முன்மாதிரியான சச்சின் டெண்டுல்கர் அவர்களை சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். அவருடன் பேசிக் கொண்டிருந்ததை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது. நான் கடைசியில் கண்கலங்கிவிட்டேன். ஏனெனில், அனைவருக்கும் தனது முன்மாதிரியானவரை சந்திப்பதுதான் வாழ்வின் நெகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத தருணமாக இருக்கும்” என்றார்.
ரெய்னா, சச்சின் பற்றி கூறியது, “என்றும் புகழை விரும்பாத அவர், தனது 47-வது பிறந்தநாளில் தாயின் நல்லாசியைப் பெற்றார்; எப்போதெல்லாம் அவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருப்பாரோ, அங்கு நிறைய கற்றுக்கொள்ளவேண்டியவை உள்ளன” என்றார்.