ஒரே நாளில் 1,554 பேருக்கு பாசிட்டிவ்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,496 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 824 ஆகவும் வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,804 ஆகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் நேற்று ஒரே நாளில் 1,554 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா ரத்து!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை அழகர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களான கள்ளழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மாண்டுக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், இராமராயர் மண்டகப்படி தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய நிகழ்சிகளுக்கு கள்ளழகர் மதுரை சென்று திரும்புவது இயலாத காரியமாக உள்ளது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பல்லாண்டுக் காலமாக நடைபெற்ற திருவிழா இடைநில்லாமல் இருக்கும் பொருட்டும், திருக்கோயில் பட்டாச்சாரியார்களின் கருத்துருவின்படியும் 8.5.2020 அன்று மண்டுகமகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை www.tnhrce.gov.in என்ற வலைதளத்தில் 8.5.2020 மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாகக் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநகராட்சிகளில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு!
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதில், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் வரும் 29-ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதேநேரம், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 28-ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பரவலாகக் கோடை மழை!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்தது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். கடந்த சில நாள்களாக வெப்பநிலையும் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாகப் பெய்தது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது.
Also Read: `ஊருக்குப் போக வழி தெரியாத முதியவர்கள்; நாடோடிக் குழுக்கள்’ – ஆச்சர்யம் அளித்த சென்னை தன்னார்வலர்கள்