மாணவர்களுக்காக ஆசிரியர் ஒருவர் தினமும் மரத்தில் ஏறி ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள இரண்டு ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர் சுப்ரதா பதி. இவர் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்து வருகிறார். இதற்கிடையே கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், இவர் தனது சொந்த ஊரான அஹந்தா கிராமத்திற்கு வந்துவிட்டார்.
ஆனால் ஊரடங்கு ஒரு மாதத்திற்கு மேலே நீட்டிக்கப்பட்டதால், மாணவர்களுக்குக் கல்வி தடை ஏற்படும் என்று இரு பயிற்சி நிறுவனங்களும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துமாறு இவரிடம் கேட்டுக்கொண்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவரும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க உடனே தயாராகியுள்ளார். இவரது செல்போனில் இருந்த டேட்டாவை வைத்துத் தான் பாடம் நடத்த வேண்டும் என்ற நிலை இருந்துள்ளது.
ஆனால் அவரது கிராமத்தில் எங்குமே நெட்வொர்க் கிடைக்கவில்லை. சிறிது உயரமான இடத்திற்குச் சென்றால் சிக்னல் கிடைக்கும் என நினைத்த ஆசிரியர், அங்கிருந்த வேப்பமரம் ஒன்றின் மீது ஏறி சிக்னல் கிடைக்கிறதா ? எனப் பார்த்துள்ளார். அங்கு நன்றாக சிக்னல் கிடைக்கவே, உடனே மூங்கில் மற்றும் கயிறுகளைக் கொண்டு தங்கும் வசதியைச் செய்துள்ளார். தற்போது தினமும் அதில் ஏறி மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். 2 அல்லது 3 மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால், தண்ணீர் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை மரத்தின் மீது கொண்டு வைத்துக்கொள்கிறார்.