மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மதுபான கிடங்கில் இருந்து உயரதிகாரிகள் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற போது மதுவிலக்கு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மது பாட்டில்களை கைப்பற்றியதோடு, மேற்பார்வையாளர் விற்பனையாளர்கள் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் மாற்று மதுபானம் தயாரித்தல் என தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள மதுபான கிட்டங்கியில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுபான கடைகளை திறக்க முடியாத அளவிற்கு சீல் வைத்தனர். பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கிட்டங்கியில் பாதுகாப்பாக இறக்கி வைத்தனர்.
இந்நிலையில் கிட்டங்கியில் இருந்து உயர் அதிகாரிகளின் உதவியுடன் மதுபான கடை மேற்பார்வையாளர் கடையின் விற்பனையாளர்கள் உள்பட 7 பேர் நேற்று மதுபாட்டில்களை கார்கள் மற்றும் டூவீலரில் கிடங்கில் இருந்து எடுத்து வந்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து கையும் களவுமாக கிட்டங்கியில் வைத்து 7 பேரையும் கைது செய்யப்பட்டனர். உயர்ரக மது பாட்டில்கள் 72-ஐ பறிமுதல் செய்தனர் மேலும் போலீசார் விசாரணையில் மேற்பார்வையாளர் ஜீவானந்தம் விற்பனையாளர்கள் சிவபாண்டி, ரவி உள்பட ஏழு பேரையும் திருமங்கலம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபான கடைகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறும் நிலையில் உயரதிகாரிகள் உடந்தையுடன் கிட்டங்கியில் மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் இருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றதால் இச்சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.