ஹைதராபாத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 17 பேர் கொரோனா நோய் உள்ளது உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில். மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், “உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். ஊரடங்கும் சமூக விலகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளைப் பிற நாடுகள் பாராட்டியுள்ளன. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது” என அறிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 10,363 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, நோய் உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்களுடன் தொடர்பிலிருந்த 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகடிவ் என வந்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் ‘தி நியூஸ் மினிட்’ செய்தி தளத்திற்குப் பேசியுள்ளனர். கொரோனா பாசிடிவ் சேதனை செய்யப்பட்ட 17 பேர் நேற்று இரவு காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 10 மாத குழந்தை அடங்கும் எனத் தெரிய வந்துள்ளது. இந்தச் சோதனையில் நெகடிவ் எனத் தெரியவந்த 24 பேரும் பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்துவதற்காக, சார்மினார் அருகிலுள்ள அரசு நிஜாமியா பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிகாரிகள் இப்போது இவர்கள் வசித்து வந்த முழு பகுதியையும் சீல் வைத்துள்ளனர். மேலும் இதை ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கிறார்கள்.