டெல்லியில் ஊரடங்கில் ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து காரில் சுற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், இதனை மேலும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தடையையும் மீறி சிலர் வெளியே வரத்தான் செய்கிறார்கள். நியாயமான காரணங்களுக்கு வெளியே வருபவர்களை போலீஸார் எதுவும் செய்வதில்லை. முறையான காரணமில்லாமல் வெளியே வருபவர்களுக்கு நூதனை தண்டனைகள் வழங்கப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இதுபோல நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தலைநகர் டெல்லியில் ஆதித்ய குப்தா என்ற இளைஞர் (வயது 29) ஊர் சுற்றுவதற்காக நூதனமான முறையில் போலீசாரை ஏமாற்ற முயற்சித்துள்ளார். இவர் கேஷவபுரம் பகுதியைச் சேர்ந்தவர். ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடு இருப்பதால் அவரால் ஊர் சுற்ற முடியவில்லை. அதனால் தன்னுடைய காரில் சைரன் வைத்துள்ளார், மேலும் ஐஏஸ் ஆஃபிஸர் என்றும் ஸ்டிக்கர் ஒட்டியவாறு சுற்றியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் ஆதித்ய குப்தாவை மறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, ‘தான் ஐஏஎஸ் அதிகாரி’ என்று போலீஸாரிடம் அவர் வாதிட்டுள்ளார். சந்தேகம் வலுத்ததால் போலீசார் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளான்ர். ஆனால், குப்தா அதனை காண்பிக்காமல் இருந்துள்ளார். பின்னர், போலீஸார் தொடர்ந்து கேள்விகளை கேட்கவே உண்மையை ஒப்புக்கொண்டார் ஆதித்யா. ஊரடங்கு காலத்தில் ஊரைச் சுற்றவே ஐஏஎஸ் போல நடித்து காரில் மாற்றங்களை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆதித்யாவை கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.