கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 23 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிதாக மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, கரூர் மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதன்முதலில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Also Read: `ஒருவருக்கு கொரோனா தொற்று; 29 பேருக்குச் சோதனை!’ – கரூர் நிலவரம் சொல்லும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இதனைத் தொடர்ந்து, அதே டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த தோகைமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, கடந்த 3-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அடுத்த நாளே, டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
அடுத்தடுத்த நாள்களில் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடாமல் இருக்கவே, கரூர் மக்கள் பெருமூச்சுவிட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று கரூர் மாவட்டம் புகழூரைச் சேர்ந்த ஒருவருக்கும், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று நபர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட, கரூர் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகக கூடியிருக்கிறது.
அதேபோல், சென்னைக்கு அடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் அதிக அளவில் சிகிச்சையில் இருப்பதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் டீன் மற்றும் கூடுதல் மருத்துவ இயக்குநர் உள்ளிட்ட புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 54 கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளும், நாமக்கல்லைச் சேர்ந்த 41 நோயாளிகளும், கரூரைச் சேர்ந்த 26 நோயாளிகளும் என்று மொத்தம் 121 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 121 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஐசோலேசன் வார்டில் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், இவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதலாக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 2 மருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பொறுப்பேற்று சிகிச்சையைத் தொடங்கி உள்ளனர். பெரம்பலூரில் இருந்து மருத்துவக் கல்லூரி டீன் தேரணிராஜன், கூடுதல் மருத்துவ இயக்குநர் ராஜ்மோகன் என இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 5 மருத்துவர்களும் புதுக்கோட்டையிலிருந்து 5 மருத்துவர்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரவழைக்கப்பட்டுள்ளனர்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.