இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசித்தார். அக்கூட்டத்தின்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிறத்திலான வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தைக் குறிப்பிட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்களுடனான காணொலிக் காட்சி கலந்தாலோசனையின்போது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க் அணிந்துள்ளார். நாம் அனைவரும் இதைப் பின்பற்றி மாஸ்க் அணிந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்” என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மட்டுமல்லாது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இந்தக் கலந்தாலோசனையின்போது மாஸ்க் அணிந்திருந்தனர்.
மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியோடு முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிப்பதை குறித்தும், இதுவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் ஏப்ரல் 14 -ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
புதுடெல்லி முழுக்க containment zones எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைக்கவும், டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்டோரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரையும் முழுமையாகத் தனிமைப்படுத்தி பரிசோதிக்க இப்போதிலிருந்து மேலும் இரண்டு வாரங்கள் தனக்கு தேவைப்படலாம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். “கொரோனா தொற்று தொடர்பாக முதல்வர்கள் எந்நேரமும் என்னைத் தொடர்புகொண்டு பேசலாம் பரிந்துரைகளும் வழங்கலாம். இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும்” என இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Also Read: `எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளலாம்!’ – மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி