மகாராஷ்டிராவில் ஏப்ரல்30 வரை ஊரடங்கு!
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து!
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவில் இப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது வரும் 14-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா எனப் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பிரதமர் சரியான முடிவு எடுத்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை விரைவில் அமல்படுத்தியதால்தான் நாம் இன்று வளர்ந்த நாடுகளைவிட சிறந்த நிலையில் இருக்கிறோம். இப்போது நிறுத்தப்பட்டால் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். நாம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
கொரோனா வைரஸ் பரவுவதலால் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் 14-ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பரவுவதல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழகம் கொரோனா வைரஸ் பரவுதலில் இரண்டாம் இடம் உள்ளது. இதனால் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம், கேரளா, உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் ஈடுபட்டு வருகிறார். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நிதி, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!
புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இதேபோல் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
24 மணிநேரத்தில் 40 பேர் பலி!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206-லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 516-லிருந்து 643 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 40 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேருக்கு புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.