கொரோனா பரவலை தடுக்க வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய 94 வயது தந்தையை வீதியில் விட்டுச் சென்ற அவலம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 94 வயது முதியவர் முனுசாமி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சௌந்தர்ராஜன் சென்னையில் வசித்து வருகிறார். ஊரில் உள்ள தன்னுடைய வீட்டினை மூத்த மகன் சௌந்தரராஜன் பெயருக்கு முற்றிலுமாக எழுதி வைத்துள்ளார் முனுசாமி.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி முனுசாமியின் மனைவி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். ஈமச்சடங்கிற்காக சென்னையில் இருந்து சேலம் வந்த சௌந்தரராஜன் தன்னுடைய சகோதரரையும், சகோதரியையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. ஊர் மக்கள் ஆதரவோடு இறுதிச்சடங்கில் பங்கேற்ற முனுசாமியின் மகள் புஷ்பவள்ளி மற்றும் இளைய மகன் ரவி குடும்பத்தினர் அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், சௌந்தரராஜன் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, பின்னர் தந்தையை சென்னைக்கு அழைத்துச் செல்வதாக கூறி இருக்கிறார். ஆனால் அடுத்த நாளே சென்னை கிளம்பிய செளந்தரராஜன் வயதான தந்தையை வீட்டு வாசலில் விட்டுவிட்டு வீட்டினை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல், தள்ளாடும் வயதிலும் தன் நிலையை உணர்ந்து வீட்டுவாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த முதியவரை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், அவரது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து முனுசாமியை உள்ளே அழைத்துச் சென்றனர்.
மகள் மற்றும் இளைய மகன் பராமரிப்பில் தற்போது முனுசாமி அவரது வீட்டில் உள்ளார். தற்போது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தன் சொத்தை மீட்டுக் கொடுக்குமாறு காவல் நிலையத்தில் முனுசாமி புகார் அளித்துள்ளார்.
அம்மா வா.. கதறி அழுத 3வயது மகள் – கலங்கவைத்த செவிலியரின் பாசப் போராட்டம்!!