கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனது பொறியியல் கல்லூரியையும், தேமுதிக அலுவலகத்தையும் பயன்படுத்துமாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 600 ஐ தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல்துறை ஆகியோர் கொரோனாவை தடுக்க தங்களால் இயன்ற வரை உழைத்து வருகின்றனர். இருப்பினும் பாதிப்பின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க கேரள அரசு புதிய முயற்சி
கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், தேமுதிக அலுவலகத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது பொறியியல் கல்லூரியையும், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தையும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகக்கவசம், உணவு, காய்கறிகளையும் தேமுதிகவினர் வழங்குவதற்கு அறிவுறுத்தி இருக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.