திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சார்வரி ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த செவ்வாய்க்கிழமை சித்திரை மாதம் 1 – ம் தேதி 13.4.2020 அன்று பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.
”மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்ப் புத்தாண்டு, தொழில் மேன்மை அளிக்கக்கூடிய ஓர் ஆண்டாக அமையும். ஆண்டின் ஆரம்பத்திலேயே ராசிக்கு 10 -ம் வீட்டில் செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருக்கின்றன.
குறிப்பாக ராஜ கிரகங்களான சனியும் செவ்வாயும் சுபத்துவ அமைப்பில் இருப்பதால், தொழில் துறை மேம்படும். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தொழில் துறையில் சாதிக்க முடியாமல் தவித்தவர்கள், தொழில் சரியாக அமையவில்லையே என்று இருந்தவர்கள், திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டு வந்த மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த சார்வரி ஆண்டு நல்ல மாற்றங்களைத் தந்து முன்னேற்றத்தைத் தரும்.
பத்தாம் பாவம் கர்மஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம். இங்கு ஒரு பாவ கிரகமாவது இருக்க வேண்டுமென்பார்கள். பாவ கிரகங்களான செவ்வாயும் சனியும் இணைந்திருக்கிறார்கள். குருவின் பார்வை பெற்றாலோ பத்தாமிடத்தில் தொடர்பு கொண்டாலோ தொழில் மேன்மை தரும் என்பது ஜோதிடத்தின் விதி.
மாதச் சம்பளம் கிடைப்பதிலிருந்து வந்த நிலையற்ற தன்மை மாறி உறுதியான நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இந்த சார்வரி புத்தாண்டில் அமையும்.
எப்போது மனிதனுக்குரிய வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு ஆதாரமாக இருக்கும் தொழில் நல்லவிதமாக அமைகிறதோ, அப்போது அவனுக்கு வாழ்க்கையில் இருக்கும் பாதிப் பிரச்னைகள் தீர்ந்து போய்விடும்.
தொழிலில் மேன்மையடையக்கூடிய ஒரு சிறந்த ஆண்டாக இந்த சார்வரி ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்திடும்.
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய் தந்தையிடமும் சமூகத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும்.
இதுவரை நீங்கள் நினைத்து நடக்காமல் இருந்த விஷயங்கள், இப்போது நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் இப்போது கிடைக்கும்.
வெளிநாட்டு நிறுவனங்கள், வெளி மாநிலங்களில் பணிபுரிந்து தொழில் ரீதியாக அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்ததற்கும் மேலான சம்பள உயர்வு இந்த ஆண்டு உங்களைத் தேடி வரும்.
நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவற்றிலும் இந்த சார்வரி புத்தாண்டில் வெற்றி கிடைக்கும். உங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தில் முயற்சிகளுக்கு வெற்றி தரக்கூடிய ராகு பகவான் இருக்கிறார். அதனால், இட்டதே சட்டம், எடுத்ததெல்லாம் வெற்றி என்கிற ரீதியில் நீங்கள் தொட்டதெல்லாம் இப்போது துலங்கும்.
வருகிற புரட்டாசி 7 – ம் தேதி வரைக்கும் ராகு பகவான் மூன்றாம் இடத்திலேயே இருப்பதால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
திருமணமாகாமல் இருந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிகழும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு திருமணங்கள் கூடி வரும். நல்ல இடத்தில் வரன் அமையும்.
வாழ்க்கையில் செட்டிலாகாமல் இருந்தவர்கள் ஒரு ஸ்திரத் தன்மை மிக்க வாழ்க்கையை நடத்துவார்கள். ஆனி மாதம் 15 -ம் தேதிக்குப் பிறகு குரு பகவான் 9 – ம் இடத்துக்குச் செல்வதால் மேலும் நல்ல பலன்கள் நடைபெறும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத ஒரு தமிழ்ப் புத்தாண்டாக இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அமையும்.