கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர்த்து, பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டாலும், இளைஞர்கள் சிலர் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கிடையே, கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது தமிழ்நாடு ஓவியர் சங்கம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாடு ஓவியர் சங்கம் புதுக்கோட்டைக் கிளை சார்பில், கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் புதுக்கோட்டையின் முக்கியச் சாலையில் நடுவே கொரோனா வைரஸின் குறித்த பிரமாண்டப் படத்தை வரைந்து அதில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி அசத்தி வருகின்றனர். பழைய பஸ்ஸ்டாண்ட், பிருந்தாவனம், திருக்கோகர்ணம் என புதுக்கோட்டையின் முக்கியச் சாலைகள் அனைத்தும் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன. விழிப்புணர்வு ஓவியங்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுபற்றி தமிழ்நாடு ஓவியர் சங்க மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறும்போது,“கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பா, ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் ரொம்பவே சிரமப் படுறாங்க. வாகனம் பறிமுதல், நூதனத் தண்டனைகள் கொடுத்தாலும் கூட அத்தியாவசியத் தேவை தவிர சிலர் வெளியே வர்றாங்கன்னு சொல்லி போலீஸார் புலம்புறாங்க. இந்த நேரத்திலதான், எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யலாம்னு முடிவு பண்ணோம். கொரோனா ஓவியங்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு வரட்டும் என்பதற்காக 15 ஓவியர்கள் சேர்ந்து சாலைகள்ல கொரோனா என்னும் எமனின் ஓவியத்தை வரைஞ்சிக்கிட்டு இருக்கோம்.
விழிப்புணர்வு வாசகத்தையும் எழுதி இருக்கோம். வீட்டைவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் சாலைக்கு வரும்போது, கண்டிப்பாக, இந்த ஓவியங்களைப் பார்க்க நேரிடும். அப்படியாவது அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படணும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி. பழைய பஸ் ஸ்டாண்டு கிட்ட மட்டும் 30 அடி நீளம் 15 அடி அகல ஓவியத்தை வரைந்திருக்கோம். புதுக்கோட்டையில் முக்கியமான 5 இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையலாம்னு திட்டமிட்டோம். மாவட்ட நிர்வாகம் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுப்பதால, மொத்தம் 15 இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையலாம்னு இருக்கோம்” என்றார்.