நீலகிரியில் தேயிலை தொழிற்சாலை முதல் மலை காய்கறி விவசாயம் நீக்கமற எல்லாத் தொழில்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் தினக்கூலிகளாகப் பணியாற்றும் இவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பணி பாதுகாப்பு போன்ற எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
தற்போது கொரோனா பெருந்தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் கடும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் உணவின்றித் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள லவ்டேல் காந்திநகர்ப் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள் 20 பேர் போதிய உணவின்றித் தவித்து வருகின்றனர்.
தங்களின் நிலை குறித்து நம்மிடம் பேசிய ஜார்க்கண்ட் இளைஞர் ஃபரூக்,“இங்குள்ள ஒரு சிறிய அறையில் 20 பேர் இருக்கிறோம். யார் கையிலும் பணம் இல்லை. எங்களிடம் 10 கிலோ அரிசி மட்டுமே உள்ளது. ஒரு வேளைக்கு 5 கிலோ அரிசி தேவைப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு பதில் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறோம். அதுவும் குறைந்த அளவில்தான் சாப்பிடுகிறோம். இந்த அரிசியும் தீர்ந்து விட்டால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தால் போதும்” என்றார். இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். “அவர்களை நேரில் சென்று பார்த்து உதவிகள் வழங்கப்படும்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.