கோவை மாவட்டம் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி வரும் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறை சார்பில் வனப்பகுதியிலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட மரக்கிடங்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு ஏழு யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் வந்துள்ளது. அப்போது யானைகள் கூட்டமாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, 2 மாதம் மதிக்கத்தக்க ஒரு குட்டி யானை தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது.
இதையடுத்து, அந்த யானைக் கூட்டத்தில் இருந்த சில யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன. வனத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் குட்டி யானையை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், தாய் யானையும் உடன் வந்த மற்றொரு யானையும் அந்த தொட்டியையே சுற்றிச் சுற்றி வந்துள்ளன. இதனால், வனத்துறையினர் அந்த இரண்டு யானைகளை விரட்டிவிட்டு, குட்டி யானையை மீட்கலாம் என்று முடிவு செய்தனர்.
இருப்பினும் தன் குட்டியை மீட்க, தாய் யானை தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தது. தனது விடா முயற்சியால் 2 மணி நேரத்துக்குப் பிறகு குட்டியானையைக் காப்பற்றி தன்னுடன் அழைத்துச் சென்றது. இதனால் வனத்துறையிரும் நிம்மதியடைந்தனர்.