“பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஏன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன்ல சுத்திட்டு இருந்தாங்கன்னு இப்போதான் புரியுது” – இதுபோன்ற லாக்-டவுண் நேர தத்துவக் கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
சொந்த வீட்டிலேயே ‘ஹவுஸ் அரெஸ்ட்’ கொஞ்சம் கொடுமையாகத்தான் இருக்கிறது என்றாலும், மக்கள் தங்களை கனெக்ட்டடாக வைத்துக்கொள்ள கேம்ஸ் முதல் சேலெஞ்ச் வரை சமூக வலைதளங்களில் பல விஷயங்களை உருவாக்குகிறார்கள். அந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்தது, ‘சாரி சேலெஞ்ச்’ டிரெண்டு.
பெண்கள், புடவை கட்டி எடுத்த தங்களின் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து, தங்கள் கான்டாக்ட்டில் உள்ள 10 பெண்களை அதில் ‘டேக்’ செய்து, அவர்களையும் அவர்களுடைய ஒரு புடவை படத்தை போஸ்ட் செய்யச் சொல்ல வேண்டும். இந்தச் சங்கிலி அப்படியே தொடர்ந்துகொண்டே செல்ல வேண்டும். இதுதான் டாஸ்க்.
இந்த வாரம் சோஷியல் மீடியாவில் ஆரம்பித்த இந்த சாரி சேலெஞ்ச், பெண்களிடம் வைரலாகிவருவது ஒரு பக்கம் இருக்க, பெண்களின் இந்த சேலெஞ்சை கிண்டல் செய்து ஆண்கள் போடும் மீம்ஸும் வைரலாகிவருகின்றன. புடவை கட்டிய வடிவேலு, ‘காஞ்சனா’ பட லாரன்ஸ் என மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்துவருகின்றனர்.
இந்த சேலெஞ்சில் பங்கேற்றிருந்த பிரபல ஃபேஷன் டிசைனர் டினா வின்சென்ட்டிடம் இதுகுறித்துப் பேசியபோது, “இந்தக் கொரோனா சூழலில், பதற்றப்படாமல் மனசை அமைதியாவும் மகிழ்ச்சியாவும் வெச்சுக்க, ‘சாரி சேலெஞ்ச்’ மாதிரியான டிஜிட்டல் சோஷியல் கனெக்ட் ரொம்பவே முக்கியம்.
என்னோட அக்கா, அவளோட புடவை போட்டோவை ஃபேஸ்புக்ல போட்டு, என்னை டேக் செய்து சேலெஞ்ச் பண்ணியிருந்தா. அதனால நானும் என்னுடைய போட்டோவை போட்டேன். இது மனசை உற்சாகப்படுத்தும் ஒரு சின்ன விஷயம் அவ்வளவுதான்.
வீட்டு வேலை செய்ய ஆள்கள் வராத சூழ்நிலையில, காலையிலயிருந்து சமைச்சு, துவைச்சு குடும்பத்துக்கான எல்லா விஷயங்களையும் பார்த்துட்டு இருக்குற பல பெண்களுக்கு, அவங்களுக்கான நேரமும் முக்கியம். அதுதான் அவங்களை சலிப்படையாம வெச்சிருக்கும். ஆனா, அப்படி அவங்க தங்களுக்கு ஏற்படுத்திக்கிற இதுபோன்ற சின்னச்சின்ன சந்தோஷங்களையும் ட்ரோல் பண்ணுறாங்களே..?” என்று ஆதங்கப்பட்டார்.
புடவையை முன்னிலைப்படுத்தி இதற்கு முன்பும் இதுபோல பல சேலெஞ்சுகள் வந்திருக்கின்றன. 2017-ல் #100DaysSareeChallenge ஹிட் ஆனது.
அதாவது, பெண்கள் தொடர்ந்து 100 நாள்கள் தங்களின் புடவை புகைப்படங்களைப் பதிவிட வேண்டும். பல பெண்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் இந்த சேலெஞ்சின்போது ஃபாலோயர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: `தோதி புடவை’ – ஜோதிகாவின் நியூ லுக் ரகசியம்!
2019-ம் ஆண்டு #SareeTwitterChallenge எனும் டிரெண்டு, ட்விட்டரில் வைரலானது. பிரபலங்கள் பலரும் அந்த டிரெண்டை வரவேற்று, அவர்கள் புடவையில் இருந்த புகைப்படங்களை கேப்ஷனுடன் ட்விட்டர் அக்கவுன்ட்டில் பதிவேற்றியிருந்தனர்.
பிரியங்கா காந்தி, ஆரஞ்சு நிறப் புடவையின் தலைப்பை முக்காடிட்டு அணிந்திருந்த தனது புகைப்படத்தை, ‘என் திருமண தினத்தன்று நடந்த காலை நேர பூஜை, 22 வருடங்களுக்கு முந்தைய புகைப்படம்’ என்ற கேப்ஷனுடன் பதிவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நடிகை சோனம் கபூர், தான் சிறுமியாக இருந்தபோது விளையாட்டாக புடவைகட்டி எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படம் இரண்டையும் இணைத்து, ‘before, after’ கேப்ஷனுடன் தன் ட்விட்டர் வலைதளத்தில் பதிவேற்றியிருந்தார்.
இதுபோல் இன்னும் பல பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் வலைதளத்தில், புடவை படங்களைப் பதிவேற்றி இருந்தனர்.
Also Read: பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை… டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!
வருடக்கணக்கில் புடவை அணிந்து வலம் வரும், ‘தி சாரி மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஹிமான்ஷு வெர்மா, 2017-ல் அவர் நடத்திய சாரி ஃபெஸ்டிவலின்போது, ‘நோ பிளவுஸ் சாரி லுக்’ எனும் சேலஞ்சை பெண்களிடம் வைத்தார். அதாவது, பிளவுஸ் இல்லாமல் புடவைகட்டி அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும்.
அவர் விளையாட்டாக ஆரம்பித்த அந்த சேலெஞ்ச் இன்ஸ்டா பெண்களிடம் படு வைரலாகி, அனைவரும் பிளவுஸ் அணியாமல் விதவிதமான ஸ்டைலில் புடவையணிந்து அந்தப் படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்ற ஆரம்பித்து, அந்த சேலெஞ்சை டிரெண்டாக்கினர்.
இப்போது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், ஃபேஸ்புக் டைம்லைனிலும் புடவையில் வரிசையாக வந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள்!
கலர்ஃபுல்லாக ஒரு டிஜிட்டல் கனெக்ட்!
Also Read: `கேரளா முண்டு ஸ்டைல் உடையில் ரம்யா பாண்டியன்!’ – லேட்டஸ்ட் போட்டோ ஷூட்