இனி புதிதாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் தனி சிறையில் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்
தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர். சிறைத்துறைத் தலைவர் டிஜிபி சுனில்குமார் சிங் மேற்பார்வையில் தமிழக சிறைகளிலும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 9 மத்தியச் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள் மற்றும் 3 பெண்கள் சிறப்புச் சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர்.
கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அதனால் சிறிய குற்றங்களில்
ஈடுபட்டுள்ள விசாரணை கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்ப நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். சிறைகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இனி புதிதாக கைது செய்யப்படுபவர்கள், தனி சிறையில் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்
தெரிவித்துள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ள அவர், ”ஏற்கனவே உள்ள கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிய
வழக்குகளில் கைதாகும் நபர்கள் தனி சிறையில் அடைக்கப்படுவார்கள். அதேபோல் அவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின்
அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்