சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதைவிட வேகமாக தமிழகத்திலும், குறிப்பாக சென்னையிலும் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது வரை 411 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு மேலும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், இது கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதால் மூடப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.