கேரளத்தின் ‘குட்டநாடு’, சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான பிரதேசம். அலைகள் எழாத நீரோடைகள், காணும் திசையெல்லாம் பசுமைபோர்த்திய வயல்வெளிகள், நீரோடையில் மிதக்கும் படகு இல்லங்கள் எனக் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் குட்டநாடு. இங்கு கிடைக்கும் நன்னீர் மீன் உணவுகளை ருசிக்கவும் ஒரு கூட்டம் படையெடுக்கும். குட்டநாடைப் பொறுத்தவரையில் படகுதான் பிரதானப் போக்குவரத்து. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் இந்த மக்கள் தனித்துவிடப்பட்டனர். குட்டநாட்டில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. படகுப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டதால், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்துவந்தனர் அப்பகுதி மக்கள். இப்போது, அவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது, சபு என்ற படகுக்காரர்தான். சபு, சொந்தமாக ஃபைபர் படகு வைத்துள்ளார். குட்டநாட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான பொருள்களை சபுதான் வாங்கி வருகிறார்.
Also Read: `வயிற்றில் 6 மாத கரு; மூச்சுவிடுவதே போராட்டம்தான்!’– கர்ப்பிணியின் கொரோனா நாள்கள்
நாங்கள் பட்டினியில் சாகாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு சபு தான் காரணம் என்கின்றனர், அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து பேசியுள்ள சபு, “ ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் 60 குடும்பங்கள் என்னை நம்பித்தான் இருக்கின்றன. அவர்களுக்கு என்னென்ன பொருள்கள் வேண்டும் என போனில் கூறுவார்கள். ஆலப்புழா நகரத்துக்குச் சென்று தேவையான பொருள்களை வாங்கி வந்து தருவேன். முதலில் எனக்கும் கொரோனா ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது. இந்த மக்கள் என்னை நம்பி இருப்பதால், நான் இவர்களுக்கு உதவி செய்கிறேன். இது என்னுடைய கடமை” என்றார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நாங்கள் இந்த உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது போல் உணர்ந்தோம். சபுவின் உதவியால்தான் எங்களுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது. படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்திதான் எங்களுக்குத் தேவையான பொருள்களை நகரத்துக்குச் சென்று வாங்கிவருவோம். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, சபு தான் எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருகிறார்” என்றனர்.