சீனாவின் ஷென்ஷென் நகரில் நாய், பூனை மற்றும் காட்டு விலங்குகளைச் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இத்தகைய தடை கொண்டுவந்த முதல் நகரம் இதுதான். சீனாவின் ஹூபே மாகாணத்தில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பாம்பு வழியாக இந்த வைரஸ் மனிதனுக்கு பரவியதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வவ்வாலிடமிருந்து எறும்புத் தின்னிக்குப் பரவியது என்றும் எறும்புத் தின்னியைக் கொன்று சாப்பிட்டதால், மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வுஹானில் உள்ள அசைவ சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் முதன்முதலில் 55 வயது மனிதருக்குப் பரவியுள்ளது. அரிய வகை இனமான எறும்புத்தின்யைச் சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தாலும் , வுஹான் சந்தைகளில் கள்ளத்தனமாக எறும்புத்தின்னி கறி விற்கப்படுகிறது என்று அமெரிக்கா கெமிக்கல் சொசைட்டி வெளியிடும் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து கள்ளத்தனமாக எறும்புத்தின்னிகள் சீனாவுக்குக் கொண்டுவரப்படுவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் ஷென்ஷென் நகரத்தில் நாய், பூனை, பாம்பு, தவளை மற்றும் வன விலங்குகளைச் சாப்பிட அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கடந்த 12 நாள்களாகப் புதியவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இதையடுத்து, ஷென்ஷென் நகர நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, வரும் மே மாதம் 31-ந் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும்.
Also Read: நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ.25,000 செலவு! -கேரள அரசு தகவல்
தேவைப்பட்டால் நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும். இதுகுறித்து ஷென்ஷென் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாய்களும் பூனைகளும் மற்ற விலங்கினங்களைவிட மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. எனவே, ஹாங்காங், தைவான் போன்ற பகுதிகளில் நாய், பூனை இறைச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி நாமும் இந்த முடிவை எடுத்துள்ளோம் ” என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் பல ஆண்டுகளாக நாய், பூனை கறிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று விலங்கின ஆர்வலர்கள் போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்துக்கு கொரோனா வடிவில் விடிவுகாலம் பிறந்துள்ளது. சீனர்களின் மிக முக்கியமான உணவு பாம்பு மற்றும் தவளைகள். அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது ஷென்ஷென் நகரம் எடுத்த உறுதியான முடிவு என்றும், இந்த நகரம் கொரோனா பாதிப்பிலிருந்து பாடம் கற்றுள்ளதாகவும் விலங்கின ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்ஷென் நகரம் ஹாங்காங் நகரை சீனாவுடன் இணைக்கிறது. இங்கு, 1.12 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதற்கிடையே, சீனாவில் பிற நகரங்களில் எறும்புத்தின்னி, பாம்புகள் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.