கோவிட் – 19 கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ‘ஊரடங்கு’, ‘லாக்-டவுணில்’ தொடங்கி ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’வரை வீட்டுக்குள்ளேயே நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.
என்றாலும், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அப்படி வெளியில் சென்று வருகையில் கொரோனா வைரஸ் நம்மைத் தொற்றாமல் இருக்க, கவனிக்க வேண்டிய விஷயங்களும், பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் பற்றியும் GEOS(Grupo Especial de Operaciones de Salvamento) என்ற பொதுநல அமைப்பு வழங்கும் வழிகாட்டுதல்கள் இங்கே.
வீட்டுக்கு வெளியே செல்லும்போது…
அவசரத் தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் செல்லும் நேரங்களில், கைகளை முழுவதும் மறைக்கும்படியான முழுக்கை ஆடையை அணிந்து செல்லுங்கள்.
நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதை சில நாள்களுக்குத் தவிர்க்கலாம். பையில் பொருள்களை வாங்கும்போது, அவை மொபைலில் படுவதைத் தவிர்க்கும்படியாக, மொபைலை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி அடியில் வைக்கலாம். அல்லது வாலெட், பர்ஸில் தனியே வைத்துக்கொள்ளலாம்.
வீட்டுக்கு வெளியே செல்லும்போது…
வெளியில் செல்லும்போது, கட்டாயம் முகக்கவசம் (மாஸ்க்), கையுறைகளை அணிந்து செல்லவும்.
சானிடைஸர் அல்லது கைகழுவத் தண்ணீர், சோப் போன்றவற்றை உடன் வைத்திருப்பது சிறந்தது.
கூட்டம், போக்குவரத்து அதிகமான நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
வீட்டுக்கு வெளியே செல்லும்போது…
தும்மும்போதும் இருமும்போதும் உங்களது முழங்கையால் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள்.
கடையில் பொருள்களுக்குப் பணம் செலுத்தும்போது, பர்ஸ், வாலெட்டில் உள்ள பணம் மொத்தத்தையும் தொட்டு, எடுத்து, வைத்து என்றிருக்காமல், வீட்டிலிருந்து கிளம்பும்போதே தேவையான பணத்தை மட்டும் எடுத்து பாக்கெட்டில் தனியே வைத்துக்கொள்ளவும். பணம், நாணயங்களை வெறும் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்.
Also Read: கொரோனா யுத்தம்! வீழுமா… வெல்லுமா தமிழ்நாடு?
வீட்டுக்கு வெளியே செல்லும்போது…
வெளியில் ஏதாவது அசுத்தமான பொருள்களைத் தொட நேர்ந்தால், உடனே கைகளை சானிடைஸர் கொண்டோ தண்ணீர் கொண்டோ சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும்போது, கட்டாயம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றொருவர் குறைந்தபட்சம் ஆறடி தூரமாவது விலகியிருக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளே வந்த பிறகு…
வெளியில் சென்றுவிட்டு வரும்போது, காலணியை வீட்டுக்கு வெளியே விடவும்.
வீட்டுக்குள் நுழையும்போது, கைகளைக் கழுவாமல் வீட்டில் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது.
வெளியில் சென்று வந்தவுடன் கைகளை மட்டுமல்லாது கால்கள் மற்றும் முகத்தையும் நன்றாகக் கழுவ வேண்டும்.
வீட்டுக்குள்ளே வந்த பிறகு…
வெளியில் சென்றபோது அணிந்து சென்ற ஆடைகளை நன்றாக ஊறவைத்து, துவைத்துக் காயவைக்கவும்.
வெளியில் சென்றபோது எடுத்துச்சென்ற உங்களது கைப்பை, சாவி முதலியவற்றையும் சுத்திகரிக்க வேண்டும்.
Also Read: `கையைப் பிடித்தே கொரோனாவைக் குணமாக்குவேன்!’ -ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த போலி மருத்துவர்
வீட்டுக்குள்ளே வந்த பிறகு…
உங்களது மூக்குக்கண்ணாடி, மொபைல் முதலியவற்றை, மைல்டான க்ளென்ஸரை லேசாக ஸ்பிரே செய்து, மிருதுவான காட்டன் கொண்டு நன்றாகத் துடைத்து சுத்தம்செய்ய வேண்டும் (மொபைலில் டெம்பர்டு கிளாஸ் இருந்தால் ஸ்கிரீன் பாதிக்கப்படாது).
வெளியில் சென்றபோது அணிந்துசென்ற முகக்கவசம் (மாஸ்க்), கையுறைகள் முதலியவற்றை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.