அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்துள்ளது. நாளுக்குநாள் அங்கு நோய் தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் பொருளாதார சக்திவாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்கா, இந்தக் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் (H-1B) விசா மூலம் பணிபுரிய இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து சென்ற பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு வருடத்துக்குப் பல ஆயிரக்கணக்கானோர் வேலைக்குச் செல்கின்றனர்.
அங்கு குறிப்பிட்ட துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிந்துவருகிறார்கள். இந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 47 மில்லியன் பேர் வேலைகளை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்து தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் அரசு, பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அரசு தரப்பில் அளிக்கப்படும் உதவிகள் (H-1B) விசா உள்ளவர்களுக்குக் கிடைக்காது.
Also Read: `குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வுப் படக்கதை!’ – மத்திய அரசு வெளியீட்டின் தமிழ் வடிவம்
டரல் சட்டத்தின்படி, (H-1B) விசா மூலம் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் அந்நாட்டில் தங்கள் வேலைகளை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாள்களுக்குள் அந்த நாட்டை விட்டுத் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேற வேண்டும். அதேபோல் (H-1B) விசா மூலம் அங்கு பணிபுரிவோர் அந்நாட்டில் அரசு அளிக்கும் உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதி அற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அந்தச் சட்டத்தின்படி, இப்போது அமெரிக்காவில் தங்கள் வேலைகளை இழந்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்நாட்டை விட்டு 60 நாள்களுக்குள் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று மிகத் தீவிரமடைந்திருக்கும் இந்த நிலையில் தங்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முறையல்ல. மேலும், வேலைகளை இழந்த பின்பு தங்குவதற்கான 60 நாள் உச்சவரம்பை 180 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமெரிக்க அரசிடம் முன் வைத்துள்ளனர்.
ஆனால் தற்போது, வெள்ளை மாளிகைக்கு (H-1B) விசா மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 20,000 பேரின் கையொப்ப படிவங்கள் மட்டுமே கோரிக்கையாக அனுப்பப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 1,00,000 கையொப்ப கோரிக்கைகள் பெறப்பட்டால் மட்டுமே வெள்ளை மாளிகை தரப்பில் அந்தக் கோரிக்கையை ஏற்று உதவ முடியும் என்ற கருத்தும் அங்கு பரவலாகப் பேசப்படுகிறது.