பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
“கொடிது கொடிது வைரஸ் கொடிது”
செல்போனில் வைரஸ் வந்தாலே தாங்காத மனசு.. உடலுக்குள் வந்தால் தாங்குமா? பாக்டீரியா, வைரஸ் குறித்து நாம் பள்ளியிலிருந்தே படித்து வந்திருந்தாலும் வைரஸ் குறித்து தற்போது தெரிந்துகொள்வோம்.
#நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகள் கண்ணுக்கு தெரியாதவை. அதில் பல நன்மை அளிப்பவை. சில மட்டுமே கெடுதல் விளைவிக்கும். அதிக நோய் பரப்புகிற கிருமி வோல்பேக்கியா எனும் பாக்டீரியா. ஆனால் அது மனிதர்களைத் தாக்குவதில்லை. மாறாக அது இறால், புழுவைத் தாக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் பலர் வியாபாரம் செய்ய வெளிநாடுகள் சென்றாலும் கடல் பயணத்தில் உப்புக்காற்றில் அழிந்துவிடும் என நம்பினர். ஒரு வேளை கிருமிகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை வென்றனர்.
#வைரஸ்
வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள். கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி. இது மிக நுண்ணிய துகள்களாகும். இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. பொதுவாக 20nm 300nm வரை விட்டமுடையவை. TMV வைரஸின் அளவு 300*20nm ஆகும். (1892ல் கண்டறியப்பட்ட புகையிலை தேமல் வைரஸ்)
வைரஸ் ஒரு ஒட்டுண்ணி. தனித்திருக்கையில் அவை செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் பொருத்தமான செல்களில் ஒட்டிக்கொண்டால் சுறுசுறுப்பாகிவிடும். ஓர் உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லிலுள்ள திட திரவப் பொருள்களை உட்கொண்டு பல்கிப் பெருகிவிடும். இதுவரை 5000 வகை வைரஸ்கள் அறியப்பட்டுள்ளன. ஜலதோசத்தில் தொடங்கி எய்ட்ஸ் வரை நம்மைப் பாதிக்கின்றன.
#வேலைனு வந்துட்டா வைரஸ்காரன்
உயிருள்ள பொருளில் முதலில் தங்கி அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் தாக்குவதற்கு நிறைய செல்களைத் தேடி அழிக்கிறது. HIV உள்ளிட்ட வைரஸ்கள் சில மரபணுக்களையே வைத்திருந்தாலும் அதன் பாதிப்பு அதிகம். இவை அனைத்தையும் மின்னணு நுண்ணோக்கியில்தான் காண முடியும்.
பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களுக்குப் பாக்டீரியோபேஜ் என்று பெயர். வைரஸில் RNA அல்லது DNA ஏதாவது ஒன்றுதான் காணப்படும். தாவரங்களை தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள். மனிதர்களை DNA மற்றும் RNA இரண்டுமே தாக்கும்.
HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNAவைக் கொண்டுள்ளதால் மனிதர்களைத் தாக்கும். எய்ட்ஸ் கிருமியால் மனிதர்கள் இறப்பதில்லை. இது T லிம்போசைட் எனும் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழிக்கிறது. இதனால் சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட உடல் இழந்துவிடுவதால் மரணம் வருகிறது. 1959ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதலில் HIV கண்டறியப்பட்டது.
#வைரஸ் பரவுவதல்
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.
* எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம்.
* எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல் வரும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.
* பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தற்போதைய கொரோனாவைக் குறிப்பிடலாம்.
#வைரஸ் நோய்கள்
தாவரங்களுக்கு 10 வகையான நோய்கள் வைரஸ்களினால் ஏற்படுகின்றன. விலங்குகளுக்குக் கோமாரி நோய், வெறிநாய் கடி, குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
மனிதர்களுக்கு சளி, ஹெப்பட்டைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ், எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்கன் குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஏற்படுகிறது. தற்போது கொரோனா நோய் severe acute respiratory syndrom=Sars-2 என்ற வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் உருவாக்கும் நோயே கோவிட்-19.
இதுவரை உலகை உலுக்கிய முக்கிய நோய்க்கிருமிகளாக ஜிபா, நிபா, எபோலோ, சார்ஸ், மெர்ஸ், லஸ்ஸா, மார்பர்க் ஆகியவற்றைச் சொல்லலாம்.
#தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து (vaccine) நோய் ஏற்படுவதற்கு முன் உடலில் வீரியம் குறைந்த நோய்க் கிருமியைச் செலுத்தி குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிராய் தடுப்பு மருந்து பயன்படுத்த முடியும்.
மற்றொன்று antibiotic எனும் எதிர் உயிரி மருந்து. நோய் வந்தபிறகு அந்நோய்க் கிருமிகளை நேரடியாய் அழிக்கப் பயன்படுவது. இது பாக்டீரியா நோய்களுக்கு எதிராக மட்டுமே செயல்படக்கூடியவை. வைரஸ்கள் செல் அற்ற வளர்சிதை மாற்ற நிகழ்வை மேற்கொள்ளாத நுண்ணுயிரி ஆதலால் இவற்றை antibiotic களால் அழிக்க முடியாது.
#கொரோனாவுக்கு ஏன் தடுப்பு மருந்து இல்லை?
வைரஸ்களை அழிப்பதுவும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்கள் வடிவம் மற்றும் தன்மைகளை மாற்றிக்கொள்ளும். அதனாலேயே பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை.
வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை வைரஸ் நோவல் கொரோனா என்று பெயர். இவ்வைரஸ் தாக்குதலில் ஈடுபடும் நோய் எதிர்ப்பு செல்களில் நுழைத்து சேதப்படுத்தி குழப்பமடைய வைக்கின்றன. உதாரணமாக கொரோனா வைரஸ்களை அழிப்பதற்கு பதில் தம் நோய் எதிர்ப்புச் செல்லையே அழித்துவிடுகிறது. நன்றாய் இருக்கும் நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் நிமோனியா தாக்குதலால் மரணம் ஏற்படுகிறது.
நம் கண்ணை வைத்து நம்மையே குத்த வைக்கிறது கொரோனா. லட்சக்கணக்கான வகைகளில் மாறிக்கொண்டே இருப்பதால் அடையாளம் கண்டு அழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.
எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கடந்த காலம் ஆச்சர்யக் குறியாகவும் இருக்கிறது தற்போது. ஆகவே கடும்காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்போம்.
எனவே நோய் நாடி நோய் முதல் நாட தனிமையை நாடுவோம்
–மணிகண்ட பிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.