கொரோனா வைரஸ் பரவும் காலகட்டத்தில் ஊரடங்கின் காரணமாக அனைவரும் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறோம். இதுபோன்ற நேரங்களில் அலுவலகத்துக்கு லீவுவிட்டாலும் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளுக்கு விடுமுறை விடமுடியாது. உயிரினங்களுக்கு ஏற்படும் பசி, தூக்கம் போன்ற மற்றோர் உணர்வுதான் காமம்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் தவிர்க்கவும் கைகொடுப்பது, கட்டியணைப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அப்படியானால் தாம்பத்யத்தில் ஈடுபடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. கொரோனா நாள்களில் தாம்பத்யம் தொடர்பான முக்கியச் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.
உடலுறவின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா?
உடலுறவின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. விந்தணுக்களிலும், கர்ப்பப்பை வாயிலிருந்து வெளியாகும் திரவத்திலும் வைரஸ் இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால் நோய்த்தொற்று காணப்படுபவர்களின் 6 அடி தூரத்தில் இருந்தாலே, அவர்கள் இருமல், தும்மலிலிருந்து தெறிக்கும் எச்சில் துளிகளின் மூலம் மற்றவருக்கு நோய் பரவும். உடலுறவின்போது தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க முடியாது என்பதால் அவற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளது.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடலாமா?
பொதுவாகவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நல்லது. தாம்பத்தியத்தினால் ஒருவருக்கிருக்கும் தொற்று மற்றவருக்கும் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் பரவும் காலத்தில் வேறு தொற்று இருப்பவர்கள் தாம்பத்யதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.
கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலிலிருக்கும் நேரத்திலும் தினமும் பணிக்குச் செல்வோர் தாம்பத்யத்தின்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!
தினமும் வேலைக்கு வெளியில் செல்பவர்கள், மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோன்று இருப்பவர்களால் அவர்களின் துணைக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் இவர்களெல்லாரும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சுய சுகாதாரத்தை அதிகம் பேண வேண்டும்.
துணைக்கு சர்க்கரைநோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவாக்கும் பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் தாம்பத்யத்தைத் தவிர்ப்பதுதான் நல்லது.
இந்த நேரத்தில் பாதுகாப்பான தாம்பத்யத்துக்கான ஆலோசனைகள் என்னென்ன?
புதிய பார்ட்னர்களுடன் இந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணுறை பயன்படுத்தினால்கூட தொடுதல், முத்தமிடுதல் மூலம் நோய் பரவும் என்பதால் புதியவர்களைத் தவிர்ப்பதே நல்லது. தனியாக இருப்பவர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவும் பின்பும் நன்றாக சோப் போட்டு கை கழுவுவது அவசியமாகும்.
முன்பெல்லாம் வீடியோ கால் போன்றவற்றில் உடலுறவு தொடர்பாகப் பேசாதீர்கள் என்று அறிவுறுத்துவதுண்டு. ஆனால் இப்போது காலத்துக்குத் தகுந்தாற்போல் இதிலும் மாற வேண்டியிருக்கிறது. நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் இதுபோன்ற விஷயங்கள் ஆரோக்கியமானவையே.
ஊடரங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் சோர்வாகக் காணப்படுவோம். இந்த நேரத்தில் தாம்பத்யம் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது?
தாம்பத்யம் என்பது நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் ஒரு விஷயம். ஊடரங்கு போன்ற நேரத்தில் மனது சோர்வாக இருக்கும்போது தாம்பத்யம் வைத்துக்கொள்வது ஆண், பெண் இருவருக்கும் புத்துணர்வைக் கொடுக்கும். தாம்பத்தியத்திலும் சுய சுகாதாரம் மிகவும் அவசியம். உறவு வைத்துக்கொள்வதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு சோப் போட்டு கழுவ வேண்டும். அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரத்தையும் பேண வேண்டும்.
இந்த நாள்களில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?
தற்போது உலகம் முழுவதும் நிச்சயமற்றதன்மை நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை பெண் கருவுற்றால் வெளியே செல்லும்போதோ மருத்துவமனைக்குச் செல்லும்போதோ வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. அதே நேரம் மருத்துவமனைக்குச் செல்வதையும் தவிர்க்க முடியாது. இதுபோன்ற காலகட்டத்தில் எந்த விஷயத்தையும் நாம் திட்டமிட்டுச் செய்ய முடியாது. அதனால் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
Also Read: கொரோனா லாக்-டவுன் நேரத்தில் என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க முடியும்? சந்தேகங்களும் பதில்களும்…