உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி 202 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாட்டில் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 7,22,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,796 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,51,766 பேர் மீண்டுவந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 18,000 மக்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கை உலக மக்களை மிகவும் கவலைகொள்ள வைத்திருக்கிறது.
கொரோனா தொடர்பாக தினம்தினம் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சமூக வலைதளங்களிலும் பல பல தகவல்கள் வருகின்றன. இவற்றில் பல போலியான தகவல்களாகவும் உள்ளன. சிலர் தங்களின் சொந்தக் கருத்தை அமெரிக்கா கூறியதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாகவும் பகிர்கின்றனர். உண்மையை அறியாத சிலர் அதைத் தொடர்ந்து ஷேர் செய்கிறார்கள்.
இதுபோன்ற போலியான தகவல்களைத் தவிர்க்கப் பலரும் சில அதிகாரபூர்வ இணையதளங்களைப் பின்தொடர்கிறார்கள். கொரோனா பரவத் தொடங்கியது முதலே சில குறிப்பிட்ட இணையதளங்களை மக்கள் அதிகளவு பின் தொடர்ந்தனர். அதில் சில இணையதளங்களை இங்கு பார்க்கலாம்.
World Health Organization – www.who.int
சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதலே இந்த இணையதளம் பல்வேறு தகவல்களை வழங்கத் தொடங்கியது. பின்னர் வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவ இந்த இணையதளத்தில் தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் உலக சுகாதார நிறுவனம், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை விரைவாக வழங்கி வருகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிக தகவல்களை அளித்து வருகிறது.
இதன் இணையதளத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள், மொத்த எண்ணிக்கை, பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் உள்ளன. உலக சுகாதார நிறுவனத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோக்களும் பெருந்தொற்று காலத்தில் மக்கள் செய்யவேண்டியது, அரசுகள் செய்ய வேண்டியது எனப் பல தகவல்கள் இந்த இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
Centers for Disease Control and Prevention (www.cdc.gov)
சீனா, இத்தாலியைத் தாண்டிய பாதிப்பு அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது முதல், அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மிக விரைவாகச் செயல்படத் தொடங்கியது. அதன் இணையதளத்தில் கொரோனா தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்தது.
கொரோனா அறிகுறிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது, முதியவர்களுக்கான கைடு லைன்ஸ் cdc-யின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அப்டேட்களும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்கர்கள் கொரோனாவுக்கான அப்டேட்களைப் பெறுவதற்காக இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் கடந்த சில வாரங்களாகவே இந்த இணையதளத்தில் ட்ராஃபிக் அதிகரித்துள்ளது.
European Centre for Disease Prevention and Control (ecdc.europa.eu)
அமெரிக்காவைப் போலவே கொரோனா ஐரோப்பாவைப் பெரிய அளவில் பாதித்தது. இதனால் ஐரோப்பாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ecdc.europa.eu பிஸியானது. மற்ற சுகாதார இணையதளங்கள் போலவே இதிலும் ஐரோப்பிய கொரோனா அப்டேட்ஸ் வழங்கப்படுகிறது.
worldometers -(www.worldometers.info)
சர்வதேச அளவில் மக்கள்தொகை, பொருளாதாரம், சமூகம், ஊடகம், சுற்றுச்சூழல், உணவு, ஆரோக்கியம் எனப் பல்வேறு துறை சார்ந்த தகவல்களை மெட்ரிக்ஸ் ஆக தரும் இந்த இணையதளம் கொரோனாவின் வருகைக்குப் பின்னர் அதிகம் ஃபேமஸாகிவிட்டது.
மற்ற இணையதளங்கள் போல் இல்லாமல், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாடு வாரியாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தப் பலி எண்ணிக்கை, புதிய மரணங்கள் என அனைத்தையும் ஒரே டேபிளில் விரிவாகக் காட்டுகிறது. மேலும் சில சில டேட்டாக்களை கிராஃபாகக் காட்டி, கொரோனாவின் வீரியத்தை நமக்குக் காட்டுவதாக உள்ளது.
Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!
கொரோனா காரணமாக தொழில்நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனாவால் உடனடியாகப் பாதிக்கப்பட்ட தொழில்துறையாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை உள்ளது. இதனால் இது தொடர்பாக இணையதளங்களில் ட்ராஃபிக் பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 38% -க்கும் மேல் குறைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே போக்குவரத்து நிறுவனங்கள் உலகம் முழுவதும் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கேப் சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சேவை தரும் தளங்களிலும் ட்ராஃபிக் வெகுவாகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சேவை துறை சிறிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும் வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த வாரத்தில் 5% வளர்ச்சியைத் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் பெற்றுள்ளன. மேலும் அரசு மற்றும் சட்டம் தொடர்பாக இணையதளங்களிலும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.
Data: similarweb