கொரோனா அச்சம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு, விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பூக்களைப் பறிக்காமல் செடியிலேயே விடுவதும், பறிக்கப்பட்ட பூக்களுக்கு போதிய விலை இல்லாமல் குப்பைத்தொட்டில் கொட்டுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கையில், பட்டுக்கூடு விலை பாதியாகக் குறைந்திருப்பது, பட்டு வளர்ப்பு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: `18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!’ – தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’
இளம்புழுக்களை வாங்கும் விவசாயிகள், அதற்கு மல்பெரிச் செடி கொடுத்து, பாதுகாப்பாக வளர்த்து, பட்டுக் கூடுகளாக மாற்றி, அவற்றை அங்காடிக்குக் கொண்டுவந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.
Also Read: `வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு
அதன்படி இன்று, தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள மாவட்ட பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு அங்காடிக்கு சுமார் 20 விவசாயிகள், தங்களது பட்டுக்கூடுகளை விற்பனைக்காகக் கொண்டுவந்தனர். இரண்டு வாரத்திற்கு முன்னர், கிலோ ரூ 500 முதல் ரூ 550 வரை வியாபாரிகளால் வாங்கப்பட்ட பட்டுக்கூடுகள், இன்று கிலோ ரூ.150 முதல் 200 வரை வாங்கப்படும் என கூறப்பட்டது.
இதைக் கேட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். வியாபாரிகள் தரப்பில் ஊரடங்கு காரணம் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய பட்டு வளர்ப்பு விவசாயி ஒருவர், “பாதி விலைக்குக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அனைவருடைய பட்டுக்கூடுகளையும் சேர்த்தால் ஆயிரம் கிலோவிற்கு மேல் வரும். நியாயமான விலையைச் சொன்னால் தானே, வாங்கிய கடனுக்கு வட்டியாவது கட்ட முடியும். எங்களுக்கு விலை கட்டுப்படியாகாது எனக் கூறி, திரும்பிவிட்டோம். சிலர், காய்கறிகூட வாங்க காசு இல்லை என்றனர். அவர்கள் மட்டும் விற்பனை செய்தனர். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, நியாயமான விலையை நிர்ணயித்துக்கொடுக்க வேண்டும்” என்றார்.
Also Read: அன்று வேப்பிலை… இன்று ஸ்டிக்கர் – கொள்ளை நோய் நாள்களின் நினைவைப் பகிரும் தேனி பாட்டிகள்
இதுதொடர்பாக, மாவட்ட பட்டுவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஊரடங்கு காரணமாக, பட்டுக்கூட்டில் இருந்து நூல் எடுக்கும் தொழிற்சாலைக்கு வேலையாட்கள் யாரும் வரவில்லை. தொழிற்சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இதெல்லாம் தான் விலை குறைவிற்கான காரணம்!” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.