சீனாவில் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவ்வப்போது ‘சைனீஸ் வைரஸ்’ என்றே குறிப்பிட்டுப் பேசி வருகிறார். சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபருடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிலையில், டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அந்த கார்ட்டூனில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்கள் நீக்கப்பட்டிருந்தன. அதற்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த கார்ட்டூன் வெளியானதும் சீனா கடும் கோபமடைந்தது. கார்ட்டூன் வெளியிட்ட ஜில்லண்ட் போஸ்டர்ன் பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. டென்மார்க்கில் உள்ள சீனத் தூதரகம், ”இந்த கார்ட்டூன் சீன மக்களின் மனதைக் கடுமையாக வேதனையடையச் செய்துள்ளது. பேச்சு சுதந்திரத்தின் எல்லையைத் தாண்டி இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதை வரைந்த நீச் போ போஜ்சன் எங்கள் மக்களிடத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியது.
ஆனால், சீன அரசிடமோ மக்களிடமோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை என்று டென்மார்க் மறுத்து விட்டது. இது குறித்து டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில், ”எங்கள் நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உள்ளது போல வரைவதற்கும சுதந்திரம் உள்ளது” என்றார்.
Also Read: கொரோனா லாக்-டவுன் நேரத்தில் என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க முடியும்? சந்தேகங்களும் பதில்களும்…
ஜில்லண்ட் போஸ்டர்ன் எடிட்டர் ஜேகாப் நைப்ரோ கூறுகையில், ”நாங்கள் செய்தது தவறு இல்லை. எனவே, மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.