கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. மக்கள் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், ஊரடங்கு அமலில் இருக்கும்வரை மதுபானக் கடைகளும் மூடியிருக்கும் என மாநில அரசு அறிவித்தது.
கேரளாவைப் பொறுத்தவரை 16 லட்சம் மக்கள் தினமும் மதுவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால், இவர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் குடிப்பழக்கத்தை விடுவதனால் ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபட மதுபோதை மறுவாழ்வு மையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இது மாநில அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 5 நபர்கள் கேரளாவில் மது கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ள, மாநில முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மதுவுக்கு அடிமையானவர்களுக்குத் தேவையான அளவில் மதுவை விநியோகம் செய்ய கலால் துறைக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் குறைந்த அளவில்தான் இது வழங்கப்படும். அதுவும் குடிப்பழக்கத்தை திடீரென நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யவும் தேவையற்ற தற்கொலைகளைத் தடுக்கும் நடவடிக்கையாகவும் இது செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவரின் ஆலோசனைகளின் பெயரிலே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபோதையில் இருந்து விடுபட மதுபோதை மறுவாழ்வு மையத்துக்கு வரும் மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று தேவைப்படுவோருக்கு மட்டும் ஆன்லைன் மூலம் மதுவை குறைந்த அளவில் விற்பனை செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.