கொரோனா வைரஸால் மனிதனே, மனிதனைக் கண்டு அச்சம் கொள்ளும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்கள் மனிதாபிமானத்தை
வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி முகக் கவசம்
மற்றும் கிருமி நாசினிகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மக்களுக்கு முகக்கவசம் சரியாக கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட தியாகதுருத்தில் உள்ள பிரகாஷ் என்ற டெய்லர், தன்னிடம் பணிபுரியும் 3 டெய்லர்களையும் வரவழைத்து மக்களுக்காக தினசரி முகக்கவசங்களை இலவசமாக தைத்துக் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது “மக்களின் உயிர் மகத்தானது. அதனை பாதுகாப்பதில் ஒரு சதவீதமாவது எனது பங்கு இருக்குமேயானால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இல்லை.
தினசரி 500-க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தைத்து மக்களுக்கு கொடுக்கிறேன். மேலும் துணி எடுத்து வரும் மக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாகவே தைத்து தருகிறேன்” என்றார்.
அதேபோல மதுரையில் டைல்ஸ் கடை நடத்தி வரும் தொழிலதிபர் வெங்கட் சுப்பிரமணி தனக்கு சொந்தமான வணிகக் கட்டடத்தை, கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக
மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க முன் வந்துள்ளார். மதுரை திருப்பாலை பகுதி புதுநத்தம் சாலை ராமசாமி நகர் பகுதியை சேர்ந்த 39 வயது இளைஞர் வெங்கட சுப்பிரமணி. இவர் மதுரையில் 20 வருடங்களுக்கும் மேலாக மங்கை டைல்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். அரசுக்கு பொதுமக்கள் நிதி உதவி அளித்து, உதவியாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறியதை மனதில் வைத்து, புதுநத்தம் சாலையில் உள்ள தனது டைல்ஸ் கடையை கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க தாமாக முன்வந்துள்ளார். இந்த இடமானது 12,000 சதுர அடி கொண்டது.
இதுகுறித்து அவர் கூறும்போது “ நிர்வாகத்திற்கு கொடுத்த வணிக வளாகம் என்பது மூன்று தளங்களோடு, தரைத்தளத்தையும் கொண்டு கட்டடமாகும். இந்த கட்டடத்தில் மின்தூக்கி,
கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டால் தனது கட்டடத்தில் யுபிஎஸ் வசதியும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். கொரோனாவை எதிர்த்து அரசு ஊழியர்கள், காவலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் மகத்தான பணிக்கு முன் இந்த செயல் பெரியது இல்லை” என கூறினார்.
“தோனி கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார்” பிராட் ஹாக் கணிப்பு
இதனைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வீடுகள் இன்றி சாலையோரத்தில் வசித்து வரும் ஏழைகளுக்கு ரயில்வே காவல்துறையினர் உணவுகளை வழங்கியுள்ளனர். இது மட்டுமல்ல அங்கு சுற்றித்திரிந்த நாய், பூனைகளுக்கும் காவலர்கள் உணவு அளித்து அந்த வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கியுள்ளனர். மேலும் சென்னை சூளைமேட்டில் திருநங்கைகள் உள்ளிட்ட 320 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகளும், திருவல்லிக்கேணி காவல்துறையினரால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக் காணப்படும் மெரினாவில், அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் சண்முகமும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார். இவர்
தன்னால் முடிந்த வரையில் பிஸ்கட் போன்றவற்றை கொடுத்து வாயில்லா ஜீவன்களின் பசியை தீர்த்து வருகிறார்.
கொரோனாவைவிட ஆபத்தாகும் ஊரடங்கு உத்தரவு உயிரிழப்புகள்?: கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்.!
இது போன்ற நிகழ்வுகள் உலகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் மனிதம் மிஞ்சியிருக்கிறது என்பதை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.