கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனித்து இருப்பதன் மூலமாக மட்டுமே இந்தத் தொற்றிலிருந்து மீள முடியும் என அரசு அறிவித்திருக்கிறது.
Also Read: `இது கிராமத்தின் பெயர், எங்களைப் புறக்கணிக்கலாமா?!’ – கொரோனா என்ற பெயரால் தவிக்கும் கோரவுனா மக்கள்
நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நெல்லை பேட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் காலம் தள்ளிவந்த நாடோடி சமூகத்தவரை ஊரடங்கு உத்தரவு வெகுவாகப் பாதித்துள்ளது.
நெல்லை பேட்டையில் வசிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வள்ளியூர் பகுதியில் உள்ள காலனியில் வசிக்கும் நாடோடி மக்கள் 144 தடை உத்தரவு காரணமாக வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் அன்றாட உணவுக்குக்கூட கஷ்டப்படும் நிலையில் இருக்கிறார்கள்.
நாடோடி சமூகத்தினரின் நிலையை அறிந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஐ.எஸ்.இன்பதுரை, உடனடியாக அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களால் தொழிலுக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியிருப்பது குறித்து அறிந்ததும், அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தன் சொந்தச் செலவில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
பணகுடி பகுதியில் தொழிலுக்காக வந்துள்ள வட மாநில இளைஞர்கள் உணவின்றி தவிப்பது பற்றி அறிந்த பணகுடி காவல்துறையினர், அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கியதுடன், உணவுப் பொருள்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு அரசியல் கட்சியினர், காவல்துறையினர், தன்னார்வலர்கள் உணவளித்து வருவதற்கு பாராட்டுகள் குவிகின்றன. இருப்பினும், விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய பெண்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவையில் இருப்போருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.