மாஸ்க் மற்றும் ஹேண்ட் வாஸ் லிக்விட் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக அவற்றைத் தயாரிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் முழுவதும் 16 மகளிர் சுய உதவி குழுக்கள், மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி வளாகத்தில், செயல்பட்டுவரும் சர்வோதீப் மகளிர் சுய உதவி குழுவினரைச் சந்திக்க நாம் சென்றிருந்தோம். 22 பெண்கள் மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்குழுவின் தலைவர் சகாய சங்கீதா அவர்களிடம் பேசினோம். “எங்கள் குழுவில் இருப்பவர்களில் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்கள்தான். மாவட்ட கலெக்டர் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 10 நாள்களாக மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். 1 மீட்டர் நீளம் கொண்ட காட்டன் துணியில் 8 மாஸ்க் தயாரிக்க முடியும். எலாஸ்டில் கொண்ட மாஸ் என்றால் 10 தயாரிக்கலாம். நாள் ஒன்றிற்கு 800 மாஸ்குகள் வரை தயாரிக்கிறோம்.
Also Read: `போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்!’ – அசத்தும் தேனி
போலீஸார், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் மகளிர் திட்ட அதிகாரிகள் மூலமாக எங்கள் மாஸ்குகள் செல்கின்றன. வேலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாஸ்க் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
சர்வோதீப் மகளிர் சுய உதவிக்குழுவினரைப் போன்று, தேனி மாவட்டம் முழுவதும் எத்தனை மகளிர் சுய உதவி குழுக்கள் மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என மகளிர் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டோம் “ஹேண்ட் வாஸ் லிக்விட், கொடுவிலார்பட்டியில் உள்ள புதுமை மகளிர் சுய உதவி குழுதான் தயாரிக்கின்றனர். மாஸ்க் தயாரிப்புப் பணி என்று பார்த்தால், தேனி மாவட்டம் முழுவதிலும் 16 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 10 நாள்களில் இவர்கள் அனைவரும் தயாரித்துக் கொடுத்த மாஸ்குகளின் எண்ணிக்கை என்று மட்டும் பார்த்தால் சுமார் 70 ஆயிரம்.! இதே போல, ஹேண்ட் சானிடைசர் தயாரிப்புப் பணியில், மகளிர் ஈடுபட்டுள்ளனர். பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.” என்றார்.