சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர்.




சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர்.





இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். ‘நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம்.
இங்க இருக்க நிறைய பொம்பளைங்களுக்கு புருஷன் கிடையாது. நாங்க வேலைக்கு போனாதான் சோறு. எங்க புள்ளைங்க எல்லாம் பட்டினியா கெடக்கு. நாங்க எதுவும் தப்பா பேசியிருந்தா கூட மன்னிச்சிடுங்க. முதல்வர் அய்யா எங்களுக்கு நல்லது பண்ணுங்க. எங்க வேலையை கொடுங்க. இல்ல எங்கள ஜெயில்ல போடுங்க. இல்ல போராட விடுங்க. இந்த ரிப்பன் பில்டிங் முன்னாடியே எங்க உசுரு போகட்டும்..’ என பெண் தூய்மைப் பணியாளர்கள் கதறினர்.





இரவு 11:15 மணிக்கு மேல் கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கோரிக்கை நிறைவேறாமல் நகரமாட்டோம் என உறுதியாக நின்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை வெவ்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

போராடிய தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின் முன்னெச்சரிக்கையாக ரிப்பன் பில்டிங்கின் கேட்டுகளை மூடி பூட்டு போட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்புக்கு காவலர்களையும் நிறுத்தியிருக்கின்றனர்.
