மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. நகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் மாநகராட்சி தேர்தல் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. மும்பை மாநகராட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆளும் பா.ஜ.க-வும், சிவசேனாவும் (ஷிண்டே) கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விதித்த சில நிபந்தனைகளை அக்கட்சி ஏற்கவில்லை. இதனால் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் நிலை இன்னும் உறுதியாகவில்லை.

அதேசமயம் பா.ஜ.க-வும், சிவசேனாவும் 150 தொகுதிகளில் பேசி முடித்து இருக்கின்றன. இதில் 102 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடவும், எஞ்சிய தொகுதிகளில் சிவசேனா போட்டியிடவும் முடிவு செய்துள்ளன. பேச்சுவார்த்தை முடிந்தது போக மொத்தமுள்ள 227 வார்டுகளில் எஞ்சியுள்ள வார்டுகளை சிவசேனாவும், பா.ஜ.க-வும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
பா.ஜ.க இம்முறை மும்பை மாநகராட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறது. அதேசமயம் கடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்குங்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க-விடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனர்.
மற்றொரு புறம் தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இடையேயும் கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே செல்கிறது. இரண்டு பேரும் கூட்டணிப் பங்கீடு தொடர்பாக பலமுறை தனியாகச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். ஆனாலும் இன்னும் இரண்டு பேரும் வார்டு பங்கீட்டை இறுதி செய்ய முடிாமல் திணறி வருகின்றனர். மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் தாதர், விக்ரோலி, பாண்டூப், சிவ்ரி, மாகிம் பகுதிகளில் வார்டுகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ்) மற்றும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிகள் இந்த பகுதிகளை கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வார்டு பங்கீடு குறித்துப் பேசி வருகின்றனர்.
வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க இருக்கும் நிலையில், வார்டு பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் செய்ய வேண்டாம் என்று ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். தாமதம் செய்வதால் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தாக்கரே சகோதரர்களுக்கு விஷப்பரீட்சை!
இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு முக்கியமான சோதனையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். “உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஆனால் சிவசேனா உடைந்த பிறகு வேறு வழியில்லாமல்தான் கடைசியாக உத்தவ் தாக்கரே ராஜ் தாக்கரேயிடம் வந்திருக்கிறார். அதேசமயம் ராஜ் தாக்கரேயும் தேர்தலில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தார். எனவேதான் உத்தவ் தாக்கரேயுடன் வேறு வழியில்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இரண்டு பேருமே இப்போது தங்களின் தேவைக்காகவே கூட்டணி சேர்ந்து இருப்பதாகவும், இத்தேர்தல் அவர்களுக்கு கடைசி பரீட்சையாக அமையும்” என்று மகாராஷ்டிரா அரசியல் ஆலோசகர் பிர்ஜுமுந்த்ரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கு தாக்கரே பிராண்ட் மட்டும் போதுமானது கிடையாது. நகராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று மும்பை மாநகராட்சியிலும் வெற்றி பெற பா.ஜ.க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் தொடர மறுத்து இருப்பது, தாக்கரே சகோதரர்களுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தாக்கரே சகோதரர்கள் இருக்கின்றனர்” என்றார். கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் இரண்டு நாள்களில் அறிவிப்பு வெளியிடும் என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
