மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.
மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியாளராக இருந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிராஜ். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தது முதல் முதன் முறையாக முதல்வரான 1991 வரை போயஸ் கார்டனில் பணிபுரிந்த இவர் பிறகு சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று செட்டிலாகி விட்டார்.
இவரின் மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடி அ.ம.மு.க. நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்தி அப்போது விகடன் தளத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த ஜோடியின் திருமணம் நேற்று ஓரத்தநாடு அருகேயுள்ள காவரப்பட்டில் நடைபெற்றது.
ரவிராஜ் அதிமுகவிலிருக்கும் பலருடன் தற்போதும் தொடர்பிலிருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார். முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அந்தப்பக்கம் மணமகன் வீட்டார் அமமுக என்பதால் அந்தக் கட்சியினரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
அதேபோல் திமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சண்.ராமநாதனும் திருமணத்தில் கலந்துகொண்டார்.
ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அகியோர் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.
