`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?’ – ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சென்னை விமான நிலையத்தின் 4-வது முனையத்தின் பிரதான லாபியிலிருந்து (Main Lobby) வெளியேறி சாலைக்கு வரும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

ப. சிதம்பரம்
ப.சிதம்பரம்

விமான நிலைய மேலாளரோ, இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ யாரும் இந்த துர்நாற்றத்தை கவனிக்கவில்லையா? இது எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு சென்னை விமான நிலைய தரப்பில் இருந்தும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

“பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் குப்பைகளை அகற்றும் லாரி இயக்கப்படுகிறது. அந்த லாரி, 10 நிமிடங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியைக் கடந்து சென்றது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அதனால், துர்நாற்றம் அங்கே வீசியிருக்கலாம். எங்களுடைய 24 மணி நேர பணி மேலாளர்கள், அந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து, பராமரிப்பை உறுதி செய்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.