US: `H-1B visa’ மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி…

வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் ‘சமூக வலைதளங்களும்’ செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏன் இந்த நடைமுறை?

சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, “அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை” என்று கூறுகிறது.

‘இவர்களுக்கும்’ பிரச்னை தான்

இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான்.

ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு.

ஹெச்-1பி விசா | H-1B Visa
ஹெச்-1பி விசா

அது எப்படி?

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே?