கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

அந்த வகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பேசிய தவெக தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம்.
நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்.
ஆனால், இந்த சமயத்தில் நம் மீது வன்ம அரசியல் விமர்சனங்கள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு முறியடிப்போம்.
அரசியல் செய்யவில்லை என பெயரளவில் பேசிவிட்டு, சட்டமன்றத்தில் முதல்வர் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினார் என்பதை மக்கள் உணராமலா இருப்பார்கள்?
நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்போம். அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தை கொடுப்பார்கள். அது வாடிக்கையாகவே இருந்தது.

இந்தியாவில் எந்த கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள்.
நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மைற்ற குறுகிய மனம் கொண்டு முதல்வருக்கு சில கேள்விகள்…
இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?
அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்?
50 வருடமாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இது எதுவுமே இல்லாமல் அரசியல் ஆட்டத்தை முதல்வர் ஆட தொடங்கிவிட்டார். இதெல்லாம் அவர்களுக்கு புதிதா என்ன?. 1972 க்குப் பிறகு திமுகவில் கேள்வி கேட்க ஆளே இல்லை.
மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதுவாவது முதல்வருக்கு தெரியுமா?
‘மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.’ என்ற அறிக்கையை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

நமக்கு வந்திருப்பது தற்காலிக தடைதான். நம்முடைய பயணத்தில் தடம் மாறமாட்டோம்.
முதல்வர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய். திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
2026-ல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். 2026 இல் இரண்டே இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று திமுக. இன்னொன்று தவெக. வாகை சூடுவோம்” என்று பேசியிருக்கிறார்.
