ட்ரம்ப் – புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர்.

அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘அதிபரானதும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன்’ என்று மிகவும் உறுதியாகக் கூறியிருந்தார். இதற்காக அவர் நம்பியிருந்த அவருடைய‌ ‘நண்பர்’ புதின் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இன்னமும் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

ஆகஸ்ட் மாதம்

கடந்த ஆகஸ்ட் மாதம், புதினை அமெரிக்காவிற்கு அழைத்து ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அங்கே பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த புதின், ரஷ்யாவிற்குச் சென்ற பின், எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை.

மேலும், அந்தச் சந்திப்பிற்கு அடுத்த இரண்டு வாரங்களில் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்கும் என்று கூறப்பட்டது.

இரண்டு மாதங்கள் ஆகியும், இந்தச்‌ சந்திப்பு இன்னமும் நடக்கவில்லை.

ட்ரம்ப் – புதின் சந்திப்பு?

இந்த நிலையில் தான், நேற்று ட்ரம்ப் – புதின் உரையாடல் நடந்துள்ளது.

ஹங்கேரியில் ட்ரம்ப் – புதின் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார்.

போர் நிறுத்தம் நடந்தால், அமெரிக்கா – ரஷ்யா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடக்க உள்ளது.

புதினின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ட்ரம்ப் உடனான சந்திப்பை உறுதிப்படுத்தும்.

இது மட்டும் நடந்துவிட்டால், ட்ரம்ப் – புதின் – ஜெலன்ஸ்கி என மூன்று தரப்பிற்குமே சூப்பர் வெற்றி.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

உக்ரைன்

உக்ரைன் மிகச்சிறிய நாடு. அது இப்போது பிற நாடுகளின் உதவியோடுதான் ரஷ்யாவுடன் மோதி வருகிறது. இது அந்தச் சிறிய நாட்டிற்கு மிகப்பெரிய சுமை, பொருளாதாரத்திற்கும் சிக்கல்தான். அதனால்தான், ஜெலன்ஸ்கி தொடர்ந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறார்.

ரஷ்யா

இப்போது ரஷ்யா. பிற உலக நாடுகள் ரஷ்யப் பொருள்களுக்கு அதிக வரி விதித்தும், தடை விதித்தும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், அமெரிக்கா ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கும் வரி விதித்து வருகிறது.

ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் பொருளாதாரத்திற்கு, இது மேலும் பெரிய அடி.

இதில் இருந்து தப்பிக்கப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

ட்ரம்ப்

உலகில் நடந்த பல போர்களை நிறுத்தியதாக கூறிக்கொண்டிருக்கும் ட்ரம்பால் தான் முதலில் கூறிய போரை நிறுத்த முடியவில்லை. நோபல் பரிசுக்காக காத்திருக்கும் ட்ரம்பிற்கு இந்தப் போர் நிறுத்தம் மிகப்பெரிய‌ ப்ளஸை வாரி வழங்கலாம்.

ஆக, சீக்கிரம் இந்தப் போர் முடிவு பெறும் என்று நம்புவோமாக!