சட்டசபை: “எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க” – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் அசம்பாவிதம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

கூட்டத்தொடர் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.

“கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போது 10 நிமிடத்திலேயே அவர் மீது செருப்பு விழுகிறது.

அதைப் பற்றி இந்த அரசு (திமுக) எந்த ஒரு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்திருக்கிறார்கள்.

சட்டசபை
சட்டசபை

ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இந்த அரசாங்கம் அதைச் செய்யவில்லை. அரசின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கும்.

ஏற்கெனவே தவெக தலைவர் 4 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அந்த இடங்களில் மக்கள் எவ்வளவு கூடியிருந்திருப்பார்கள் என்று அரசுக்கும், காவல்துறைக்கும் தெரியும். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி இடங்களை ஒதுக்கியிருக்கலாம்.

ஆனால் அவர்கள் இடத்தை சரியாக ஒதுக்கவில்லை. மக்கள் சந்திப்பு இடத்தில் காவல்துறையினர் அதிகமாக இல்லை.

கரூர் சம்பவ இடத்தில் 500 காவல்துறையினர் இருந்ததாக ஏடிஜிபி சொல்கிறார். ஆனால் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 660 காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்ததாக சொல்கிறார்.

இதில் முரண்பாடு இருக்கிறது. அதனால்தான் மக்கள் இந்த அரசாங்கம் மீது சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு அந்த இடத்தைத்தான் (வேலுசாமிபுரம்) கேட்டோம். ஆனால் ‘போக்குவரத்து நெரிசல், குறுகிய சாலை’ என இரண்டு காரணங்களைக் காட்டி அந்த இடத்தை எங்களுக்கு கொடுக்கவில்லை.

எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெக கூட்டத்திற்கு கொடுத்தார்கள். அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று எண்ணித்தான் இந்த அரசாங்கம் இதை செய்திருக்கிறது.

அவசர அவசரமாக ஒரு நபர் கமிஷன் அமைக்க வேண்டியதன் நோக்கம் என்ன? கிட்னி முறைகேட்டிற்கு ஏன் ஒரு நபர் கமிஷன் அமைக்கவில்லை.

மருத்துவமனையில் உரிய வசதி இல்லாமல் எப்படி அவ்வளவு சீக்கிரமாக உடற்கூறாய்வு செய்ய முடியும்? இந்தக் கேள்வியை கேட்டால், ஏதோ பதில் சொல்கிறார்கள். அரசின் அலட்சியம்தான் இந்த கரூர் சம்பவத்திற்குக் காரணம்” என்று திமுக அரசு குறித்து பேசியிருக்கிறார்.