இந்தியா வந்த அமெரிக்க தூதர்; இது இந்தியா – அமெரிக்க உறவில் பாசிட்டிவ் மாற்றத்தை தருமா?

கடந்த வாரம், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் உறுதி செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்தியா வந்த செர்ஜியோ கோர், நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.

மோடி பதிவு

இது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

அவருடைய பணிக்காலத்தில் இந்தியா, அமெரிக்கா உறவு மேலும் வலுவடையும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கர் - செர்ஜியோ கோர்
ஜெய்சங்கர் – செர்ஜியோ கோர்

செர்ஜியோ கோர் என்ன சொல்கிறார்?

மோடியுடனான சந்திப்பு குறித்து செர்ஜியோ கோர், “பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுடனான நமது உறவு வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செர்ஜியோ கோர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இந்திய – அமெரிக்க உறவு

கடந்த சில மாதங்களாக, வர்த்தகம், வரி என இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் விழுந்துள்ளது. அனுபவம் மிகுந்த இவருடைய வருகை இதை சரிசெய்யும் என்று இருதரப்பும் நம்புகிறது.

கடந்த வாரம், ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தொடர்ந்து வர்த்தகம் சம்பந்தமாக பேசுவோம் என்று கூறியிருக்கிறார்.

இது இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக நடந்து வருவதற்கான சமிக்ஞையாக எடுத்துக்கொள்ளலாம்.