எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இது சீனாவைச் சேர்ந்த பிராந்தியம் ஆகும். இங்கே கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பனிப்புயல் தொடங்கியுள்ளது. அது சனிக்கிழமை முழுவதுமே தொடர்ந்துள்ளது.
இதனால், சாலைகள் அடைபட்டு, ஏற்கெனவே மலையில் இருந்த டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது சிகரத்தில் சிக்கி உள்ள வீரர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
இவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராமவாசிகளும், சீன மீட்புப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்டனர் என்று சீனாவில் இருந்து வெளியாகும் அறிக்கைகள் கூறுகின்றன.