வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தத்தின் சில அம்சங்களுக்குத் தடைவிதித்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையில் செயல்படும் தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 மீதான உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் உத்தரவு, நீதி, அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாப்புக்கான மகத்தான வெற்றி.

விஜய் தலைமையிலான எங்கள் மனு மற்றும் இது சார்ந்த மற்ற மனுக்கள் மீதான விசாரணையில் மதிப்பிற்குரிய நீதிமன்றம் நியாயம், சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை கடுமையாக வலுவிழக்கச்செய்யும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளது.
1. மாநில அரசுகள் விதிமுறைகளை உருவாக்கும் வரை, வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இயக்கமுறைகள் இல்லாதவரை அந்த விதி நியாயமற்றதும், அரசமைப்புக்கு எதிரானதுமாகும்.
2. வக்ஃப் நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிப்பது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டை மீறுவதாகும்.
தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை சர்ச்சைக்குரிய வக்ஃப் நிலத்தின் நிலை மாறாமல் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
3. மத்திய வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாதோர் நான்குக்கும் மேலாக இருக்கக் கூடாது, மாநில வாரியங்களில் மூன்றுக்கும் மேலாக இருக்கக் கூடாது.
இந்த வெற்றியை அடைவதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட, விலைமதிப்பற்ற பங்களிப்பை அளித்த சட்ட குழுவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் கூறியிருக்கின்றனர்.