Nepal: சமூக வலைதளங்களுக்குத் தடை; வெடித்த இளைஞர்கள் போராட்டம்! – என்ன நடக்கிறது நேபாளத்தில்?

நேபாளத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை விதிகளுக்கு உட்பட்டு அந்த நாட்டில் இயங்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என ஆளும் பிரதமர் கே.பி.சர்மா தலைமையிலான அரசு அறிவித்தது. 

இதைப் பதிவு செய்வதற்கு தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுக்கு ஏழு நாள்கள் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மெட்டா, கூகுள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் பதிவு செய்ய எந்தவொரு முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி நேபாள அரசின் இந்த அறிவிப்பையே கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கால அவகாசம் கொடுத்தும் மெட்டா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் எந்தவித பதிலும் அளிக்காததால், இன்று (செப்டம்பர் 8) காலை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்திருக்கிறது நேபாள அரசு.

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

நேபாள அரசின் இந்தச் செயல் நேபாளத்தை தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடாக மாற்றுவிடும் என்றும் ‘`ஊழலை ஒழியுங்கள், சமூக வலைதளங்களை ஒழிக்காதீர்கள்” என்று இளைஞர்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினரை மீறியும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் தடுப்புகள் அனைத்தும் உடைக்கப்பட்டது. இந்த நெரிசலில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தினைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீர் அடித்தும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால், சமூக வலைதளங்களுக்கு தடையை நீக்கும்வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இது நாடுமுழுவதும் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

நேபால் பிரதமர் கே.பி.சர்மா

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா, “நேபாளத்தில் வணிகம் செய்து, பணம் சம்பாதித்து, சட்டத்தை மதிக்காமல் இருப்பவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சில தனிநபர்களின் வேலை இழப்பை விட நாட்டின் சுதந்திரம் பெரியது.

சட்டத்தை மீறுவது, அரசியலமைப்பை புறக்கணிப்பது, தேசிய கண்ணியம், சுதந்திரம் மற்றும் இறையாண்மையை அவமதிப்பது ஆகியவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை சீர் கெடுக்க வேண்டும் என்ற நோக்கமல்ல இது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs