சென்னை: மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி; “மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி” – தமிழிசை கண்டனம்

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், மின்சார வாரிய அலட்சியம் காரணம் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி குடும்பத்தை நேரில் சந்தித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

 தூய்மைப் பணியாளர்
தூய்மைப் பணியாளர்

இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ”சென்னையில் மழை வந்தவுடன் சரியான கட்டமைப்பு இல்லாததனால் இப்படி எத்தனை அழுகுரல்களைக் கேட்கப் போகிறோம். விடியற்காலை துப்புரவுப் பணிக்குச் சென்ற சகோதரி வரலட்சுமி மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தன் உயிரை இழந்து இருக்கிறார்.

அவர் அதிகாலை அந்த இடத்தில் தன் உயிரைத் தியாகம் செய்து பல பேரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். காலை அந்த மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் அவர் காலை வைக்காவிட்டால் பல பேர் காலை வைத்து உயிரை இழந்து இருப்பார்கள் என்ற கவலை மேலோங்குகிறது.

இந்தத் திராவிட மாடல் அரசினால் சீர் செய்யப்படாத இந்தச் சிங்கார சென்னை எத்தனைப் பேரை காவு வாங்கப் வாங்க போகிறதோ.. நான் தமிழக முதலமைச்சரிடமும் சென்னை மாநகராட்சி இடமும் வேண்டிக் கேட்டுக் கொள்வது தயவு செய்து சென்னையின் கட்டமைப்பைச் சரி செய்யுங்கள்..

இந்த மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி வாங்கப்படுகிறது என்றால்… இன்னுமே பெருவெள்ளத்தில் சென்னை சிக்கினால் எத்தனை உயிர்கள் பலி வாங்கப்படுமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது… தயவு செய்து மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

தமிழிசை
தமிழிசை

மேலும், “நான் இப்படி பதிவு போட்ட உடனேயே 200 உபிக்கள். . உத்தரபிரதேசத்தில் நடக்கவில்லையா மத்திய பிரதேசத்தில் நடக்கவில்லையா என்று மனிதாபிமானமே இல்லாமல் பதிவிடுவார்கள்.. முதலில் தமிழகத்தில் உள்ள உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்…

விடியலை நோக்கி என்று எவ்வளவு கதை சொன்னீர்கள் என்று இன்று மழை நீர் வடியாமல் விடியற்காலையிலும் உயிர்கள் பலியாவதைப் பார்க்க மனது பதை பதைக்கிறது.. விளம்பரங்களை விடுத்து. செயலாற்றுங்கள் தமிழக முதலமைச்சர்கள்” என மு.க ஸ்டாலினை டாக் செய்து பதிவிட்டுள்ளார் தமிழிசை செளந்தர ராஜன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk