கமல் ஹாசன்: “கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்” – மோடியை சந்தித்த கமல்!

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள கமல் ஹாசன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆதரவுடன் கடந்த ஜூலை 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

பிரதமரைச் சந்தித்த கமல்
பிரதமரைச் சந்தித்த கமல்

மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறியிருக்கிறார். முக்கியமாக கீழடி குறித்து பேசியதாகக் கூறியுள்ளார்.

கமல் ஹாசன் பதிவு:

இது குறித்த அவரது சமூக வலைத்தள பதிவில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

கமல் ஹாசன் – நரேந்திர மோடி

மேலும் கீழடியைக் குறிப்பிடும் வகையிலான நினைவு பட்டயம் ஒன்றையும் பிரதமருக்கு பரிசளித்துள்ளார் கமல் ஹாசன்.