வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? – ஆசிரியர் புகார்… சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் ராமச்சந்திரன்

வருமான வரி மோசடி புகார் தொடர்பாக சிபி-ஐயால் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனிடம் வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக மதுரை சிபிஐ அலுவலர் தினேஷ்குமார் என்பவர் மீது மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவால் 30.05.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன். இவர் சகோதரர் பஞ்சாட்சரத்தின் வங்கி கணக்கிலிருந்து 12 லட்சம் பெற்று வருமானவரி முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருடைய தேசிய நல்லாசிரியர் விருது திரும்பப் பெறப்பட்டது.

இவர் வழக்கு விஷயமாக மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட தினேஷ்குமார் என்பவர் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தன்னிடம் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிரியர் ராமச்சந்திரன் புகார் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் ராமச்சந்திரன் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ அதிகாரி தினேஷ்குமார் மீது கடந்த 30.05.2025 அன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில் ஆஜராக ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மதுரை சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.