Israel: “கிரேட்டா தன்பெர்கின் படகை எதிர்கொள்ள ‘தயாராக’ இருக்கிறோம்” – இஸ்ரேல் ராணுவ அதிகாரி!

சுவிடனைச் சேர்ந்த 22 வயது காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேஸ் ராணுவத்தை எதிர்த்து, அங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகக் கடந்த ஜுன் 1ம் தேதி சிசிலியில் உள்ள கேடேனியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இஸ்ரேல் ராணுவம் கிரேட்டா தன்பெர்க் செல்லும் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பலை தடுத்து நிறுத்த தயாராக இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பாய்மரக் கப்பல்களுக்கான ஜெனரல் எஃபி டெஃப்ரின்

“இதுமாதிரி விஷயங்களில் நாங்கள் சமீப ஆண்டுகளில் அனுபவம் பெற்றுள்ளோம், அதன்படி செயல்படுவோம்” என, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பாய்மரக் கப்பல்களுக்கான ஜெனரல் எஃபி டெஃப்ரின் தி டைம்ஸ் ஆஃப் லண்டனிடம் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கக் காத்திருக்கிறது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

காசா பகுதியை இஸ்ரேல் முற்றிலுமாக முற்றுகையிட்டுள்ளதால், கடந்த 90 நாட்களுக்கும் மேலாக வெளியில் இருந்து உதவிப்பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கிரேட்டா தன்பெர்க்கின் படகு நிறைய பால், புரோட்டீன் பார்கள், பேபி ஃபார்முலா, டயப்பர்கள், மாவு, அரிசி, நீர் வடிகட்டிகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

 ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பல்
ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பல்

இந்த படகு ஜூன் 7ம் தேதி காசாவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டாவுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் லியாம் கன்னிங்ஹாம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 12 சர்வதேச செயற்பாட்டாளர்கள் செல்கின்றனர்.

இந்தச் செயற்பாட்டை,”இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகை மற்றும் போர்குற்றங்களை சவால் செய்யும் வன்முறையற்ற நேரடி நடவடிக்கை” எனக் கருதுகின்றனர்.

“நாம் என்னவிதமான சவால்களை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறோம். ஏனென்றால், நாம் முயற்சி செய்வதைக் கைவிடும் தருணம், மனிதாபிமானத்தை இழக்கும் தருணம்” என கிரேட்டா கூறியுள்ளார்.

கடந்த மாதம் இதேப் பணிக்காக FCC இயக்கிய ஒரு கப்பல் ட்ரோன்களால் தாக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேல் ராணுவம்தான் காரணம் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துள்ளது.